கோவை: கோவையில் கல்வியும் விடாமுயற்சியும் இருந்தால் எந்த உயரத்தையும் அடையலாம் என்று பேசிய நடிகர் சிவக்குமார், தனது விடுகதைக்கு விடை கூறிய தமிழாசிரியருக்கு ஆயிரம் ரூபாய் வெகுமதி அளித்துள்ளார்.
கோவை அன்னூரில் உள்ள நித்தில்யம் என்ற சிறப்பு மாணவர்கள் பயிலும் பள்ளியின் 11-வது ஆண்டு விழா இன்று நடைபெற்றது. விழாவையொட்டி ‘குரல் ஓசை’ என்ற சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவக்குமார் கலந்து கொண்டார்.
அப்போது ஆட்டிசம் பாதிக்கப்பட்ட சிறப்புக் குழந்தைகள் மிகச்சரியாக திருக்குறள் மற்றும் அதன் பொருளைக் கூறி அசத்தினர்.
அந்தக் குழந்தைகளை சிவக்குமார் பாராட்டி ஊக்குவித்தார்.
இதனைத் தொடர்ந்து சிவக்குமார் தனது வாழ்க்கைப் பயணம், சினிமா அனுபவங்கள், கல்வி, குடும்பம் மற்றும் ஆன்மிகம் குறித்த நினைவுகளை பகிர்ந்து உணர்ச்சிகரமாக உரையாற்றினார்.
அவர் பேசியதாவது:
ஒரு சாதாரண கிராமத்தில் பிறந்து, பள்ளியில் சேர்ந்த 11 பேரில் அனைவரும் படிப்பை பாதியிலேயே கைவிட்ட நிலையில், எங்கள் கிராமத்தில் முதன்முதலாக எஸ்.எஸ்.எல்.சி. முடித்தவன் நான்தான்.

சிறுவயதிலேயே தந்தையை இழந்த நான், விதவைத் தாயின் அரவணைப்பில் வளர்ந்தேன்.
சினிமாவில் 192 படங்களில் நடித்துள்ளேன். அவற்றில் 175 படங்களில் வில்லன் மற்றும் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்ததோடு, 87 படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளேன்.
பின்னர் திரைப்படங்களை விட்டு மேடைப் பேச்சுகளில் கவனம் செலுத்தினேன்.
2005 முதல் இன்று வரை சுமார் 20 பெரிய மேடைகளில் நீண்ட நேர உரைகளை நிகழ்த்தியுள்ளேன். 81 வயதிலும் நான்கு மணி நேரம் இடைவிடாமல் தண்ணீர் கூட அருந்தாமல் பேசியிருக்கிறேன். அதற்கு முன்பு 75 வயதில் மகாபாரதம் குறித்தும், 67 வயதில் கம்பராமாயணம் குறித்தும் விரிவாக உரையாற்றியுள்ளேன்.
கம்பராமாயணத்தின் ஆயிரக்கணக்கான பாடல்களை மனப்பாடமாகக் கற்று பேசிய அனுபவம் எனக்கு உள்ளது. கல்வி, உழைப்பு மற்றும் விடாமுயற்சி இருந்தால் எந்த உயரத்தையும் அடைய முடியும் என்பதற்கு என் வாழ்க்கையே சாட்சி.
ஒரு கட்டத்தில் துறவற வாழ்க்கை வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் திருவண்ணாமலையில் தியான வாழ்க்கையிலும் ஈடுபட்டேன். ஆனால் குடும்ப வாழ்க்கையின் முக்கியத்துவத்தை உணர்ந்து திருமணம் செய்து கொண்டேன்.
சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த காலத்திலும் திருமணத்திற்காக பல இடங்களில் தேட வேண்டிய சூழல் இருந்தது.
இன்று நான் பெற்றிருக்கும் அங்கீகாரம், புகழ் மற்றும் சாதனைகள் அனைத்திற்கும் இறைவனுக்கும், என்னை நேசித்து ஆதரித்து வரும் மக்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன் என்றார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் கணித விடுகதையைக் கூறிய சிவக்குமார், இதற்கு பதில் கூறும் நபர்களுக்கு ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தார்.
சிறிது நேரம் கழித்து, கூட்டத்தில் அமர்ந்திருந்த தமிழ் ஆசிரியர் ஒருவர் விடுகதைக்கான பதிலைச் சொல்லி ரூ.1000 நடிகர் சிவகுமாரிடம் பெற்றுக் கொண்டார்.
இந்த விடுகதைக்கு பதில் கூறி தன்னிடம் இதுவரை மூன்று பேர் மட்டுமே பரிசு பெற்றதாக சிவக்குமார் ஆச்சரியம் தெரிவித்தார்.


