கோவை: கோவையில் நடைபெற்று அரசு பொருட்காட்சியில் 8 நாட்களில் லட்சக்கணக்கில் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
கோவை வ.உ.சி மைதானத்தில் தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அரசு பொருட்காட்சி ஆனது நடைபெற்று வருகிறது. 32 அரசு துறைகள் சார்ந்த அரங்குகள் அமைக்கப்பட்டு அந்தந்த துறைகள் சார்ந்து முன்னெடுக்கப்பட்ட பல்வேறு செயல்பாடுகள் அந்த அரங்குகளில் விளக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்தந்த அரசு துறை அரங்குகளில் உள்ள அலுவலர்கள் பார்வையாளர்களுக்கு துறை சார்ந்த முன்னெடுக்கப்பட்ட செயல்பாடுகள் குறித்து விரிவாக எடுத்துரைத்து வருகின்றனர். அதுமட்டுமின்றி இந்த அரசு பொருட்காட்சியில் குறைந்த விலைக்கு பல்வேறு விளையாட்டு பொருட்கள் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. பொழுதுபோக்கு விளையாட்டுகளும் இடம் பெற்றுள்ளன.
நாள்தோறும் பல்வேறு பொதுமக்கள் அரசு பொருட்காட்சிக்கு வருகை புரிந்து அனைத்தையும் கண்டு களித்து வரும் நிலையில் விடுமுறை நாட்களில் அதிக அளவிலான மக்கள் கூட்டம் காணப்படுகிறது.
அரசு பொருட்காட்சி துவங்கிய எட்டு தினங்கள் முடிவுற்ற நிலையில் முழுமையாக வரப்பெற்ற வருவாய் குறித்து மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி கடந்த எட்டு தினங்கள் நடைபெற்ற இந்த பொருட்காட்சியில் 7 லட்சத்து 69 ஆயிரத்து 390 ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை ஆகிய நேற்று மட்டும் 53 ஆயிரத்து 821 பார்வையாளர்கள் இந்த பொருட்காட்சிக்கு வருகை புரிந்துள்ளனர்.



