கோவை: கருத்து சுதந்திரத்தை தவெக அரசு முடக்குகிறதா என்பதை சுட்டிக்கட்டி கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
தமிழகத்தில் கருத்து சுதந்திரத்தை முடக்கும் வகையில் செயல்பட்டு வரும் தவெக அரசைக் கண்டித்து, கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் திரண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஊடகங்களிடம் பேசியதற்காக, டாஸ்மாக் ஊழியர் ஒருவர் முன்னறிவிப்பின்றி பணிநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து இந்த போராட்டம் நடத்தப்பட்டது.
தமிழகத்தில் புதிய அரசு பதவியேற்றதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் முதற்கட்டமாக 171 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று அதிரடி அறிவிப்பு வெளியானது. அரசின் இந்த முடிவை வரவேற்றாலும், கடைகள் மூடப்படுவதற்கு முன்பாக அங்கு பணியாற்றும் தொழிலாளர்களின் மாற்றுப் பணி மற்றும் வாழ்வாதாரம் குறித்து, டாஸ்மாக் ஊழியரான ராதாகிருஷ்ணன் என்பவர் ஊடகங்கள் வாயிலாக அரசிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில், ராதாகிருஷ்ணனை, எவ்வித முன்னறிவிப்பும் இன்றி தவெக அரசு திடீரென பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. அரசின் இந்த நடவடிக்கைக்கு டாஸ்மாக் ஊழியர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதனைக் கண்டித்து, கோவை பீளமேடு பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு மாநில வாணிபக் கழக (டாஸ்மாக்) அலுவலகம் முன்பாக ஊழியர்கள் திரண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தவெக அரசுக்கு எதிராக ஆவேசமாக முழக்கங்களை எழுப்பிய ஊழியர்கள், பழிவாங்கும் நோக்கில் போடப்பட்ட பணிநீக்க உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
மேலும், பாதிக்கப்பட்ட ஊழியருக்கு மீண்டும் பணி வழங்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்றும், பணிநீக்க உத்தரவை திரும்பப் பெற்றால் மட்டுமே மீண்டும் பணிக்கு திரும்புவோம் என்றும் ஊழியர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
கோவையில் அரசுக்கு எதிராக டாஸ்மாக் ஊழியர்கள் நடத்திய இந்த திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.



