கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறக்கப்பட்ட நிலையில், அதில் இருந்து தங்கம், வெள்ளி, பித்தளையுடன் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும் காணிக்கையாக பெறப்பட்டுள்ளது.
மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு கோவை மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த மக்களும் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.
அவ்வாறு வரும் பக்தர்கள், திருக்கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள உண்டியலில் ரொக்கமாகவும், நகைகளாகவும் தங்களது காணிக்கைகளை செலுத்துகின்றனர்.
இந்த சூழலில், கோயில் தக்கர் ஜெயக்குமார், செயல் அலுவலர் விமலா உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் கோயில் நிர்வாகிகள் முன்னிலையில் இன்று உண்டியல் திறப்பு நடைபெற்று காணிக்கைகள் மதிப்பிடப்பட்டன.
Also Read: Power Cut In Coimbatore | நாளைய மின்தடை பகுதிகள் வெளியீடு!
அதன்படி, உண்டியலில் இருந்து 105 கிராம் தங்க நகைகளும், 5.502 கிலோ வெள்ளி நகைகளும், 25.7 கிலோ பித்தளை பொருட்களும் காணிக்கையாக பெறப்பட்டுள்ளன. மேலும், ரொக்கமாக ரூ.1,05,52,486 பெறப்பட்டுள்ளதாக மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.



