கோவை: அமைச்சர் சரத்குமாரை பதிவி நீக்கம் செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கோவை நாடாளுமன்ற உறுப்பினர் மாநகராட்சி மேயர் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
தமிழ்நாடு மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் சரத்குமார் போதைப் பொருள் பயன்படுத்தியதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
உடனடியாக அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்கம் செய்து போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் அதே சமயம் அனுமதியின்றி திமுகவினர் ஆர்ப்பாட்டம் மேற்கொள்வதால் காவல்துறையினர் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை மாநகர் மாவட்ட செயலாளர் செந்தமிழ் செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், மாநகராட்சி மேயர் ரங்கநாயகி உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டனப் பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறையினர் கலைந்து செல்ல அறிவுறுத்திய நிலையில் அவர்கள் கலைந்து செல்லாததால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கோவை நாடாளுமன்ற உறுப்பினர், கோவை மாநகராட்சி மேயர் உட்பட அனைவரும் கைது செய்யப்பட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.



