கோவை: கோவையில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை மாநகரில் கல்லூரி மாணவர்கள் இளைஞர்கள் மத்தியில் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த 5 பேரை கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர்.
கோவை மாநகர் கோவைப்புதூர் பகுதியில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலிசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது கோவைப்புதூர் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள, காலி இடத்தில் 5 பேர் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்துள்ளனர். அவர்கள் காவல்துறையினரை கண்டதும் தப்பிச் செல்ல முயன்றதாக தெரிகிறது.
சந்தேகத்தின் பேரில் 5 பேரையும் போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்ட போது வலி நிவாரண மாத்திரைகளை போதைப் பயன்பாட்டுக்காக விற்பனை செய்பவர்கள் என்று தெரியவந்தது.
தொடர் விசாரணையில் அவர்கள் ராகுல், ஜான் ஜோசப், ராம்பிரசாத் , முகமது அனாஸ் எனத் தெரிந்தது. இவர்கள் கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்குச் இந்த மாத்திரைகளை வாங்கி வந்து கோவையில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து 5 பேரையும் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 5 பேரையும் கைது செய்த குனியமுத்தூர் போலீசார் அவர்களிடம் இருந்து சுமார் 40 லட்சம் மதிப்புள்ள 13 ஆயிரம் போதை மாத்திரைகள், 2.5 கிலோ கஞ்சா, இரு பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


