கோவை: நாயை குத்தி கொலை செய்த நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் மதுக்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பாலத்துறை முருகன் கோவில் வீதியை சேர்ந்தவர் ரஞ்சித் குமார். இவர் பொமேரியன் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார்.
அதே சமயம் அவரது அண்டை வீட்டாரான விமல் என்பவர் நாய் குலைத்துக் கொண்டே இருப்பதாக அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த 29 ஆம் தேதி ரஞ்சித் குமாரின் வளர்ப்பு நாய் குலைத்ததால் ஆத்திரம் அடைந்த விமல் வீட்டில் இருந்த கத்தியை கொண்டு அந்த நாயை சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார்.

இது குறித்து ரஞ்சித்குமார் மாவட்ட விலங்குகள் வதை தடுப்பு சங்கத்தினரிடம் தெரிவித்துள்ளார். பின்னர் அச்சங்கத்தினர் அளித்த புகாரின் பேரில் மதுக்கரை காவல்துறையினர் விமல் மீது BNS 325(விலங்குகளை கொல்வது, விஷம் வைப்பது) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது குறித்து விமலிடம் தொடர் விசாரணையும் நடைபெற்று வருகிறது.


