கோவை : கோவையில் மனவளர்ச்சி குன்றிய 8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட வடமாநில தொழிலாளியை போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவையில் மனவளர்ச்சி குன்றிய 8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட வடமாநில தொழிலாளியை போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் துடியலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலர் வசித்து வருகின்றனர். அவர்களில் ஒருவரின் 8 வயது மனவளர்ச்சி குன்றிய மகளுக்கு, அதே பகுதியில் வசித்து வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த கதிர் குமார் மாஜி (48) என்பவர் பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.
சிறுமியின் உடல்நிலையில் ஏற்பட்ட மாற்றங்களை கவனித்த உறவினர்கள் சந்தேகமடைந்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து காந்திபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
சிறுமி மனவளர்ச்சி குன்றியவர் என்பதால் மருத்துவ பரிசோதனை மற்றும் சட்ட நடைமுறைகளின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் குற்றச்சாட்டு உறுதியானதைத் தொடர்ந்து கதிர் குமார் மாஜி மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையில், சம்பவம் நடைபெற்ற பகுதிக்கு சென்ற கோவை ‘சிங்கப்பெண்’ சிறப்பு போலீஸ் குழுவினர் பொதுமக்களிடம் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அப்போது பேசிய பெண் போலீசார், குழந்தைகளை தனியாக விடாமல் பாதுகாப்பாக கவனிக்க வேண்டும் என்றும், வேலைக்குச் செல்லும் பெற்றோர் நம்பகமான நபர்களின் பொறுப்பில் மட்டுமே குழந்தைகளை ஒப்படைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். குழந்தைகளின் பாதுகாப்பில் பெற்றோர்களின் விழிப்புணர்வே மிக முக்கியம் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


