கோவை: மேகதாது அணை விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவர் தலையிட வேண்டுமென மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.
மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் வாழ்வாதாரத்தைக் காப்பதற்கு, இந்திய குடியரசுத் தலைவர் உச்ச நீதிமன்றத்திடம் விளக்கம் கோர வேண்டும் என வலியுறுத்தி மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் வலியுறுத்தி அமைதியான முறையில் பதாகைகளை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மறுமலர்ச்சி மக்கள் இயக்கத் ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 30 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மேகதாது அணைக்கான அனுமதியை மத்திய நீர்வள ஆணையமும் வழங்கியிருப்பது தமிழகத்திற்கு பெரும் இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது என்றும் அதன் காரணமாக தமிழகத்திற்கான நீர்வரத்து பாதியாகக் குறைந்துவிடும் சூழல் ஏற்படும் என்றனர்.
தற்போது மேகதாதுவில் அணை கட்டப்பட்டால், மேட்டூர் அணைக்கு ஒரு சொட்டுத் தண்ணீர் கூட வராத நிலை ஏற்படும். தமிழகத்தின் பாசனப் பரப்பு முற்றிலும் அழிவதோடு, காவிரியை நம்பியுள்ள பல மாவட்டங்களின் குடிநீர் தேவையும் கேள்விக்குறியாகும் என்றும் தமிழகம் பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளது என்றனர்.
கடந்த 1991ஆம் ஆண்டு காவிரி நீரைப் பறிப்பதற்காக கர்நாடகா சட்டம் இயற்றியபோது, அன்றைய குடியரசுத் தலைவர் தனக்குள்ள அரசியல் சாசன சட்டப் பிரிவு 143-ன்கீழ் உச்ச நீதிமன்றத்திடம் விளக்கம் கோரி சில கேள்விகளை எழுப்பியதாகவும் அதற்கு உச்ச நீதிமன்றம் அளித்த பதில்தான் இன்றுவரை காவிரியை நமக்குக் காப்பாற்றித் தந்துள்ளது என்ற அவர்கள் அதே போன்ற ஒரு இக்கட்டான சூழல் இப்போதும் ஏற்பட்டுள்ளது.
எனவே, தற்போதைய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள், தனக்குள்ள அரசியல் சாசன அதிகாரம் ‘ஆர்ட்டிகிள் 143’-ஐப் பயன்படுத்தி, மேகதாது அணை விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்திடம் சில முக்கியக் கேள்விகளை எழுப்பி விளக்கம் கேட்க வேண்டும் என்றனர்.
இதனை வலியுறுத்தி, குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டிய கோரிக்கைகள் அடங்கிய பட்டியலைத் தயாரித்து, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள தபால் நிலையத்தில் அனுப்பும் போராட்டத்தை இன்று தொடங்கியுள்ளோம் என்றும் தமிழக முதலமைச்சர், அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இந்த விவகாரத்தில் குடியரசுத் தலைவர் தலையிட வேண்டும் என்று அழுத்தம் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.


