கோவை: மருதமலை அடிவாரம் அருகே இருசக்கர வாகனத்தில் 4.100 கிலோ கஞ்சாவை கடத்தியதாக இரு வாலிபர்களை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் கைது செய்து, கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
கோவை மாநகரில் போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு மற்றும் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், வடவள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மருதமலை அடிவாரம், ஐ.ஓ.பி. காலனி பகுதியில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
Also Read:ஒடிசா வாலிபருடன் சேர்ந்து கஞ்சா விற்பனை- இருவர் கைது…
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு வாலிபர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.
அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால், அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, விற்பனைக்காக கடத்தி வரப்பட்ட 4 கிலோ 100 கிராம் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
Also Read: கோவைப்புதூரில் அரை நிர்வாணமாக கிடந்த பெண்; செல்போன் பேச்சால் வந்த வினை!
இதையடுத்து, 4.100 கிலோ கஞ்சாவையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கோகுல்நாத். இவர் தற்போது கோவை கவுண்டம்பாளையம், சேரன் நகர், மணல் தோட்டம் பகுதியில் தங்கி வந்தது தெரியவந்தது. மற்றொருவர் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த வசந்த் (24). இவர் தற்போது பீளமேடு, செங்காளியப்பன் நகர் பகுதியில் வசித்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இருவர் மீதும் போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர், இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
Powercut news Coimbatore Tomorrow (7.7.2026)


