கோவை: கோவை ரயில் நிலையம் அருகே லாட்ஜ் ஊழியரின் ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள கியர் சைக்கிளை மர்ம நபர் திருடிச் சென்ற சி.சி.டி.வி காட்சிகள் வைரலாகி வருகின்றன.
கோவை ரயில் நிலையம் மற்றும் கீதா கேண்டீன் சுற்றுவட்டாரப் பகுதியில் ஏராளமான தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. அப்பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் தென் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஊழியராக பணியாற்றி வருகிறார். அவர் தினமும் தனது கியர் சைக்கிளில் வேலைக்கு வந்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில், மூன்று நாட்களுக்கு முன்பு வழக்கம்போல் லாட்ஜின் தரைத்தளத்தில் சைக்கிளை நிறுத்திவிட்டு பணிக்குச் சென்றுள்ளார். அப்போது அந்தப் பகுதியில் சுற்றித்திரிந்த மர்ம நபர் ஒருவர், யாரும் இல்லாத நேரத்தை நோட்டமிட்டு, சைக்கிளை எளிதாக எடுத்துச் சென்று தப்பியுள்ளார்.
பணி முடிந்து வெளியே வந்த ஊழியர், தனது சைக்கிள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
திருடப்பட்ட கியர் சைக்கிள் வாங்கி ஒரு வருடம்கூட ஆகவில்லை என்றும், அதன் மதிப்பு சுமார் ரூ.15 ஆயிரம் என்றும் கூறப்படுகிறது. கஷ்டப்பட்டு உழைத்து வாங்கிய சைக்கிள் திருடப்பட்டதால், அந்த ஊழியர் மிகுந்த மனவேதனையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஊழியர், கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் சி.சி.டி.வி ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சைக்கிளை திருடிச் சென்ற மர்ம நபரை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, எந்தவித பதற்றமும் இல்லாமல் நடந்து வந்து, கண் இமைக்கும் நேரத்தில் கியர் சைக்கிளை திருடிச் செல்லும் மர்ம நபரின் சி.சி.டி.வி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


