கோவை: கோவையில் நாப்கின் எரிப்பு இயந்திரம் அரசு பெண்கள் மாநகராட்சி பள்ளிக்கு வழங்கப்பட்டது.
கோயம்புத்தூர், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், மாணவிகளால் உருவாக்கப்பட்ட நாப்கின் எரிப்பு இயந்திரம் (1 இயந்திரம்) சித்தாபுதூர் மாநகராட்சி பெண்கள் உயர்நிலைப் பள்ளிக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்ததாவது, ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகளின் முயற்சியில் உருவாக்கப்பட்ட சூரிய சக்தியில் இயங்கும் நாப்கில் ஸ்மார்ட்பின் என்ற நாப்கின் எரிப்பு இயந்திரமானது, சித்தாபுதூர் மாநகராட்சி பெண்கள் உயர்நிலைப் பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ளது. பெண்களின் மாதவிடாய்கால சுகாதாரத்திற்கு உதவும் வகையிலும் பயன்படுத்தப்பட்ட நாப்கின்களை சுகாதாரமான முறையில் அகற்றும் வகையில், இந்த இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த இயந்திரம் முற்றிலும் சூரிய சக்தியில் இயங்குவதால் மின்சாரம் தேவைப்படுவதில்லை என்பதோடு மட்டுமல்லாமல், சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தவும் பங்களிக்கிறது. பெண்களின் சுகாதாரத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் கழிவு மேலாண்மையிலும் தொழில்நுட்பத்தின் பங்களிப்பு முக்கியமானது. எனவே, மாணவிகள் இது போன்ற திட்டங்களை உருவாக்க முன் வரவேண்டும்.
மேலும் பெண்களின் உடல்நலம்சுற்றுச்சூழல். பாதுகாப்பு மற்றும் கழிவு மேலாண்மைக்கு உதவும் வகையில், இந்த கல்லூரி மாணவிகள் உருவாக்கிய இந்த கண்டுபிடிப்புக்கு எனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி கல்வி அலுவலர் குணசேகரன், எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் தலைமை செயல் அலுவலர் ராம்குமார் தலைமை நிர்வாக அலுவலர் மகேஷ்குமார், ஸ்ரீ ராம கிருஷ்ணா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் கி.சித்ரா, கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


