கோவை:மனைவியின் பெயரில் வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த 80 பவுன் தங்க நகைகள் அபகரிக்கப்பட்டதாகக் கூறி, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஒருவர் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
கோவை மாவட்டம் சூலூர் அருகே சுல்தான்பேட்டை பகுதியைச் சேர்ந்த முருகேசன் (72), கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார் மனுவில், லட்சுமிநாயக்கன்பாளையம் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி 2012-ஆம் ஆண்டு ஓய்வு பெற்றதாகவும், தனது மனைவி சாந்தினி அரசு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி 2016-ஆம் ஆண்டு ஓய்வு பெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.
Also Read: Pollachi Female Elephant Found Dead; Digestive Disorder Suspected
தனது மனைவிக்கு சிறுநீரக நோய் இருந்ததால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவருக்காக வாங்கியிருந்த 80 பவுன் தங்க நகைகளை, மனைவியின் சகோதரிகள் தில்லைநாயகி மற்றும் காஞ்சனா ஆகியோர், தனது அனுமதியின்றி மனைவியின் பெயரில் போத்தனூரில் உள்ள வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்ததாக புகாரில் கூறியுள்ளார்.
இதுகுறித்து பின்னர் மனைவி தெரிவித்தாலும், அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு அதை பெரிதுபடுத்தவில்லை என்றும், 2024-ஆம் ஆண்டு மனைவி உயிரிழந்த பிறகு, வங்கி மேலாளர் உதவியுடன் தில்லைநாயகி, காஞ்சனா மற்றும் அவர்களது கணவர்கள் முருகன், கார்த்தி ஆகியோர் இணைந்து 80 பவுன் நகைகளை எடுத்துச் சென்றதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
Also Read: கோவையில் லஞ்சம் வாங்கிய போலீஸ்காரர் கையும் களவுமாகக் கைது!
இதுகுறித்து வங்கியிலும், சம்பந்தப்பட்டவர்களிடமும் விளக்கம் கேட்டபோது உரிய பதில் அளிக்காமல் காலம் தாழ்த்தியதுடன், பின்னர் நகைகளை திருப்பித் தருவதாக கூறியும் வழங்கவில்லை என்றும், தொடர்ந்து கேட்டபோது தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுத்து, தனது 80 பவுன் தங்க நகைகளை மீட்டுத் தர வேண்டும் என முருகேசன், கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.





