கோவை: கோவை மாவட்ட போலீசார் சார்பில் நடைபெற்ற “போதைப்பொருள் இல்லா கோவை 2026” மாரத்தானில் 10,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
கோவை மாவட்ட போலீசார் சார்பில் நடைபெற்ற “போதைப்பொருள் இல்லா கோவை 2026” மாரத்தான் போட்டியில் 10,000-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
பொதுமக்களிடையே போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த மாரத்தான் நடத்தப்பட்டது. கோவை மதுக்கரை – மாதம்பட்டி மேற்கு புறவழிச்சாலையில் இன்று காலை 5 மணிக்கு மாரத்தான் தொடங்கியது.
நிகழ்ச்சியை அமைச்சர் விக்னேஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார், ஐஜி ரம்யா பாரதி, எஸ்.பி. பவன்குமார் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மாரத்தான் தொடங்குவதற்கு முன்பாக போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கமும் நடைபெற்றது.
“ஒரு நோக்கத்திற்காக ஓடுவோம்! போதைப்பொருள் இல்லா கோவைக்காக ஓடுவோம்!” என்ற முழக்கத்துடன் நடைபெற்ற மாரத்தானில் பெரியவர்கள், இளைஞர்கள் மற்றும் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் என 10,000-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
Also Read: கோவை தீயணைப்புத் துறையில் அதிரடி பயிற்சி; ஸ்கை லிப்டில் உயர்மட்ட மீட்பு பயிற்சி
“ஒரு முடிவின் தொடக்கம்” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு நடைபெற்ற இந்த நிகழ்வு, போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிராக பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.





