கோவை: கோவை தனியார் கல்லூரி மாணவர் அமுதன் மரணத்தை தொடர்ந்து, அவரது சகோதரருக்கு அரசு வேலை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. சட்டசபை கூடும் நாளில் வெளியான இந்த அறிவிப்பு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த கென்னடியின் மகன் அமுதன் (19). கென்னடி அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அமுதன் கோவை ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த 10-ம் தேதி கல்லூரிக்கு வந்த அமுதனையும், அவரது நண்பரையும் 2-ம் ஆண்டு மாணவர்கள் 10-க்கும் மேற்பட்டோர் கல்லூரியின் பின்புறம் உள்ள மைதானத்திற்கு அழைத்துச் சென்று சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அமுதன் பரிதாபமாக உயிரிழந்தார்.
Also Read: கோவையில் கழுதைகளுக்கு கல்யாணம்: எங்கு? எதற்காக?
அமுதன் உயிரிழந்ததற்கு, கல்லூரியில் போதைப்பொருள் புழக்கம் தொடர்பாக நிர்வாகத்திடம் அவர் புகார் தெரிவித்ததே காரணம் என அவரது பெற்றோர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தனர். இதனிடையே, அமுதனை தாக்கி கொலை செய்ததாக 10 மாணவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவம் தமிழகத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மாணவர் அமுதன் மரணம் தொடர்பாக தமிழக சட்டசபையிலும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய நிலையில், மாணவர்களின் பாதுகாப்பு, கல்லூரிகளில் போதைப்பொருள் புழக்கம் மற்றும் போலீஸ் விசாரணை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து காரசாரமான விவாதங்கள் நடைபெற்றன.
இந்நிலையில், இன்று தமிழக சட்டசபை கூட உள்ள நிலையில், அமுதனின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்குவதுடன், அவரது சகோதரருக்கு அரசு வேலை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு முன்பு, கரூரில் நடைபெற்ற கூட்ட நெரிசலில் 31 பேர் உயிரிழந்த சம்பவத்திலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு அரசு வேலை வழங்கி தமிழக அரசு பணி ஆணை வழங்கியது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள் தரப்பில் எதிர்ப்புகள் எழுந்தன. இதுதொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையும் அரசு பணி ஆணைக்கு தடை விதித்திருந்தது.
Also Read: பூண்டி வெள்ளியங்கிரி சாலையில் ஒற்றை யானை அட்டகாசம் – பைக்கை விட்டுவிட்டு ஓட்டம்!- VIDEO
இந்த பின்னணியில், சட்டசபை கூடும் நாளில் அமுதனின் குடும்பத்தினரை அரசு தரப்பில் நேரில் சந்தித்து நிதியுதவி மற்றும் அவரது சகோதரருக்கு அரசு வேலை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது தற்போது அரசியல் ரீதியாகவும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமுதன் மரணத்திற்கான காரணம், கல்லூரியில் போதைப்பொருள் புழக்கம் தொடர்பான புகார் உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் ஏற்கனவே எழுந்துள்ள நிலையில், அரசு வேலை அறிவிப்பு மூலம் முக்கிய விவகாரங்கள் திசைதிருப்பப்படுவதாக சில சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த விவகாரம் இன்று நடைபெற உள்ள சட்டசபை கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளால் எழுப்பப்படலாம் என்றும், அமுதன் மரணம், போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அரசு வேலை அறிவிப்பு குறித்து தமிழக அரசிடம் விளக்கம் கேட்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.





