கோவை: 5 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்த பெண்ணை சாதியை காரணம் காட்டி கணவர் குடும்பத்தினர் மிரட்டுவதாகவும், பணம் பெற்றுக்கொண்டு விலகுமாறு கூறுவதாகவும் கோவை மாநகர போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறையைச் சேர்ந்த அர்சனா, திண்டுக்கல்லைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவரை 5 ஆண்டுகளாக காதலித்து, கடந்த மே மாதம் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
திருமணத்திற்கு பிறகு சாதியை காரணம் காட்டி கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னை மிரட்டுவதாக கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அவர் புகார் அளித்துள்ளார்.
புகாரில் அர்சனா கூறியிருப்பதாவது:
நான் வால்பாறை பகுதியைச் சேர்ந்தவர். தற்போது கோவை சிவானந்த காலனியில் வசித்து வருகிறேன். திண்டுக்கல்லைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவரும் நானும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தோம்.
இதையடுத்து, கடந்த மே மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டோம்.
Also Read: பூண்டி வெள்ளியங்கிரி சாலையில் ஒற்றை யானை அட்டகாசம் – பைக்கை விட்டுவிட்டு ஓட்டம்!- VIDEO
திருமணத்திற்கு பிறகு ஆடி மாதத்தை காரணம் காட்டி, கணவர் குடும்பத்தினர் என்னை வால்பாறைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு எனது கணவர் முத்துக்குமார், அவரது தாயார் மற்றும் குடும்பத்தினர் என்னை கோவை செம்மொழி பூங்காவிற்கு வரவழைத்தனர்.
அங்கு, கணவர் குடும்பத்தினர் எனது சாதியை குறிப்பிட்டு பேசியதுடன், தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர் என்பதால் என்னை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருவதாகவும் கூறி மிரட்டியதாக புகாரில் தெரிவித்துள்ளார்.
மேலும், சாதிப் பெயரை குறிப்பிட்டு தன்னை தாக்கியதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
தனது கணவர் நீதிமன்றத்தில் பணியாற்றி வருவதாகவும், அவரது தாயார் அரசு பள்ளி ஆசிரியராகவும், தந்தை நூலகத்தில் நூலகராகவும் பணிபுரிந்து வருவதாகவும் அர்சனா தெரிவித்துள்ளார்.
Also Read: கோவையில் கழுதைகளுக்கு கல்யாணம்: எங்கு? எதற்காக?
இந்த விவகாரம் தொடர்பாக கோவை மாவட்டம் கோட்டூர் காவல் நிலையம், மாவட்ட எஸ்.பி. அலுவலகம், கோவை மாநகர ஆர்.எஸ்.புரம் காவல் நிலையம் மற்றும் மத்திய அனைத்து மகளிர் காவல் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் புகார் அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தனது கணவரே நேரில் வந்து, இருவரும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்றும், எங்கு சென்றாலும் தனக்கு நியாயம் கிடைக்காது என்றும் கூறி தன்னை துன்புறுத்துவதாகவும் அர்சனா புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பணத்தை பெற்றுக்கொண்டு வேறு வாழ்க்கையை அமைத்துக்கொள்ளுமாறு கணவர் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
எனவே, தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுத்து, தனது வாழ்க்கைக்கு நீதி பெற்றுத்தர வேண்டும் என அர்சனா கோரிக்கை விடுத்துள்ளார்.





