கோவை : கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் கடைக்கு சென்ற நபரின் வாகனத்தை நோட்டமிட்டு, அதை திறந்து செல்போன் மற்றும் முக்கிய ஆவணங்களை மர்மநபர் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான CCTV காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாநகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குற்றச் சம்பவங்களை கட்டுப்படுத்த மாநகர காவல்துறையினர் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் முக்கிய இடங்களில் CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள கடை ஒன்றின் முன்பு நேற்று ஒருவர் தனது வாகனத்தை நிறுத்திவிட்டு அருகில் உள்ள கடைக்கு சென்றுள்ளார்.
இதனை நோட்டமிட்டுக் கொண்டிருந்த டிப்டாப் ஆசாமி, சற்று நேரத்தில் அந்த வாகனத்தை திறந்துள்ளார். பின்னர் வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த செல்போன்கள் மற்றும் முக்கிய ஆவணங்களை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
VIDEO
இந்த திருட்டு சம்பவம் அங்குள்ள கடையில் பொருத்தப்பட்டிருந்த CCTV கேமராவில் பதிவாகியுள்ளது. அதில் மர்மநபர் வாகனத்தை திறந்து பொருட்களை திருடிச் செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
CCTV காட்சிகளின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருட்டில் ஈடுபட்ட மர்மநபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காந்திபுரம் 100 அடி சாலையில் பட்டப்பகலில் நடைபெற்றதாக கூறப்படும் இந்த திருட்டு சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தற்போது வெளியாகியுள்ள CCTV காட்சிகள் சம்பவத்தின் பரபரப்பை அதிகரித்துள்ளன.





