கோவை: கோவையின் முக்கியமான மற்றும் பிஸியான அவிநாசி சாலையில், ஒரே இருசக்கர வாகனத்தில் 4 இளம் பெண்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை ஹோப் கல்லூரி பகுதியில் இருந்து கிருஷ்ணம்மாள் கல்லூரி நோக்கி சென்ற இருசக்கர வாகனத்தில் 4 பெண்கள் ஒரே நேரத்தில் அமர்ந்து பயணம் செய்துள்ளனர். தலைக்கவசம் அணியாமல், போக்குவரத்து விதிகளை மீறி, சாலையில் செல்லும் பிற வாகனங்களுக்கு இடையே ஆபத்தான முறையில் அவர்கள் பயணித்த காட்சிகள் பின்னால் வந்த காரில் இருந்த நபரால் செல்போனில் பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், சாலை பாதுகாப்பு குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதற்கு முன்பாகவும் இதே அவிநாசி சாலையில் 3 பெண்கள் ஒரே இருசக்கர வாகனத்தில் ஆபத்தான முறையில் பயணித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சம்பந்தப்பட்ட பெண்களை அழைத்த போக்குவரத்து போலீசார் அவர்களுக்கு அறிவுரை வழங்கினர்.
அப்போது இனிமேல் இதுபோன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபட மாட்டோம் என அவர்கள் தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது.
Video
இந்நிலையில், காவல்துறையினர் அறிவுரை வழங்கிய சில நாட்களிலேயே மீண்டும் 4 பெண்கள் ஒரே இருசக்கர வாகனத்தில் ஆபத்தான முறையில் பயணித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்ற செயல்கள் பயணிப்பவர்களின் பாதுகாப்புக்கு மட்டுமின்றி, சாலையில் செல்லும் மற்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, போக்குவரத்து விதிகளை மீறி ஆபத்தான முறையில் பயணிப்பவர்கள் மீது வெறும் அறிவுரையுடன் நிறுத்தாமல், உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாநகர போக்குவரத்து போலீசாருக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





