கோவை: அவினாசி சாலை மேம்பாலம் அருகே இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றியுள்ளனர்.
கோவையில் தொடர்ந்து அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்கள் மற்றும் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் ஒருபகுதியாக மாநகரில் சாலைகளை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள கடைகள் மற்றும் கட்டிடங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. கடந்த வாரம் வின்சென்ட் சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றி நடவடிக்கை எடுத்தனர்.
Advertisement


இந்த நிலையில், கோவை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள அவினாசி சாலை மேம்பாலத்தின் அருகிலிருந்த ஆக்கிரமிப்பு கடைகள் இன்று அகற்றப்பட்டன.
அவினாசி சாலை மேம்பாலத்தின் கீழ் பகுதியில் சென்று திரும்பும் வாகன ஓட்டிகள், ஆக்கிரமிப்புகளால் கடுமையாக அவதியடைந்து வந்த நிலையில் மாநகராட்சி நிர்வாகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.