கோவை: நாடு முழுவதும் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் கோவையில் போலீசார் விடிய விடிய வாகன தணிக்கை நடத்தியுள்ளனர்.
ஜம்மு – காஷ்மீரில் உள்ள பஹல்காமை அடுத்த பைசரன் பள்ளத்தாக்குப் பகுதியில் இயங்கி வரும் ரிசார்ட்டில், கடந்த ஏப்ரல் மாதம் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் புல்வெளியில் குதிரை சவாரி உள்ளிட்ட கேளிக்கைகளில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது, அங்கு நுழைந்த தீவிரவாதிகள் சுற்றுலா பயணிகள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் வெளிநாட்டினர் 2 பேர் உள்ளிட்ட 28 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குள் நுழைந்த தீவிரவாதிகள் இந்த வெறி செயலில் ஈடுபட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுக்க முடிவு செய்தனர்.
இதை தொடர்ந்து பாகிஸ்தானிற்குள் புகுந்து இந்தியா ராணுவம் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் மற்றும் அவர்களது முகாம்களை குண்டு வீசி அழித்தது. இதனால் இந்தியா – பாஸ்கிதான் போர் ஏற்பட்டுள்ளது.
இதனால் மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளுக்கும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய உத்தரவிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் ஒத்திகைகள் நடந்து வருகிறது.
அதேபோல கோவை மாநகரில் போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் துணை கமிஷனர்கள் தேவநாதன், உதயகுமார் மற்றும் அனைத்து உதவி கமிஷனர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாகள் நேற்று தீவர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
நேற்று இரவு முதல் விடிய விடிய வாகன சோதனை செய்தனர். சந்தேகத்திற்கிடமாக வரும் வாகனங்கள், நபர்களின் விரங்களை சேகரித்தனர். தொடர்ந்து போலீசார் கோவை, வடகோவை, போத்தனூர் ரயில் நிலையங்கள், காந்திபுரம், உக்கடம், சிங்காநல்லூர் பஸ் நிலையங்களில் மற்றும் கோவையின் முக்கிய பகுதிகளில் போலீசார் தீவிரமாக கண்காணித்தனர்.
மேலும், போலீசார் அவர்களது ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஓட்டல், தங்கும் விடுதி,
லாட்ஜூகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதனால் நேற்று இரவு கோவை பரபரப்பாக காணப்பட்டது.