கோவை மாநகராட்சியில் நடப்பது மாமன்ற கூட்டம் அல்ல என்றும் திமுக கொள்கை கூட்டம் என்றும் அதிமுக கவுன்சிலர் ஆவேசம் கொண்டார்…
கோவை மாநகராட்சி வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹாலில் அவசர மாமன்ற கூட்டம் மாநகராட்சி மேயர் ரங்கநாயகி தலைமையில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் துவக்கத்தில் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர் கூட்டம் துவங்கிய பொழுது மாநகராட்சி பகுதிகளில் செயல்படும் மயானங்களில் நேரம் குறித்து விவாதிக்கப்பட்ட பொழுது குறுகிட்ட அதிமுக கவுன்சிலர் பிரபாகரன் அவசர மாமன்ற கூட்டத்தில் மயான நேரம் குறித்தான கேள்விகள் அவசியமா என்று ஆவேசம் கொண்டார். அதற்கு மாநகராட்சி மத்திய மண்டல தலைவர் மீனா லோகு மேயர் கேள்விகள் முன் வைப்பது வழக்கமான ஒன்றுதான் என தெரிவித்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் நிகழ்ந்தது.
Advertisement

பின்னர் மாநகராட்சி பகுதிகளில் குப்பைகள் தரம் பிரிப்பது குறித்து விவாதிக்கும் பொழுது அவை முறையாக செயல்படுத்தப்படுவதில்லை என அதிமுக கவுன்சிலர் பிரபாகரன் கூறியதால் கூட்டத்திலிருந்து திமுக கவுன்சிலர்களும் காங்கிரஸ் கவுன்சிலர்களும் சிபிஎம் உள்ளிட்ட ஆளும் கட்சியில் கூட்டணி கட்சி கவுன்சிலர்களும் பிரபாகரனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கூட்டத்தில் பரபரப்பான சூழல் நிலவியது. பின்னர் தேசிய கீதம் பாடப்பட்ட கூட்டம் நிறைவடைந்தது.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசி அதிமுக கவுன்சிலர் பிரபாகரன், தமிழக முதல்வர் போட்டோ சூட் ஆட்சியை நடத்துவது போன்று கோவை மாநகராட்சி மேயரும் போட்டோ சூட் நடத்துவதாக விமர்சித்தார். திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் கோவை மாநகராட்சியில் உருப்படியாக எதுவுமே கொண்டு வரப்படவில்லை என தெரிவித்த அவர் அதிமுக ஆட்சி காலத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குளங்கள் அனைத்தும் சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு வந்ததாகவும் ஆனால் தற்பொழுது பராமரிப்பின்றி கிடைப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் இன்று நடந்த மாமன்ற கூட்டம் என்பது திமுகவின் கொள்கை பரப்பு கூட்டம் என ஆவேசம் கொண்ட அவர் நூற்றுக்கணக்கான விஷயங்களை குறிப்பில் கொடுத்து விட்டு அரை மணி நேரத்தில் முடித்துவிட்டு செல்வதாக தெரிவித்தார். மேலும் வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறும் மக்கள் குறை தீர்ப்பு கூட்டமும் தற்பொழுது நடத்தப்படுவதில்லை என தெரிவித்தார்.