கோவையில் பணிகள் இல்லை… வரிகள் மட்டுமே உள்ளது… எஸ்.பி.வேலுமணி பேட்டி

கோவை: கோவை மாநகராட்சியில் மக்களுக்கு பணிகள் நடப்பதற்கு பதில் வரிகள் தான் போடப்படுகிறது என முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி குற்றம் சாட்டியுள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியரிடம் மாவட்டத்தின் வளர்ச்சி பணிகள் மந்தமான நிலையில் நடைபெற்று வருவதாகவும் விரைவுபடுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மலை அடிவார கிராமங்களில் அட்டகாசத்தில் ஈடுபடும் ஆணைகளை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனுவை முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது,
கோவை மாவட்டத்தில் யானையின் தொந்தரவுகள் அதிகமாக உள்ளது. குறிப்பாக தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் ஒரு வாரத்திற்கு முன்னர் மருதாச்சலம் என்பவரை ஆட்டுக்கல் பகுதியில் யானை தாக்கி உயிரிழந்து விட்டார். நரசிபுரம் பகுதியில் யானைத் தாக்கி படுகாயம் அடைந்து கோவை கங்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் அவரை நேரில் சென்று பார்த்து விட்டு இங்கு வருவதாகவும் கூறியவர், கிராம பகுதிகளில் யானைகள் சர்வ சாதாரணமாக ஊருக்குள் வந்து செல்கிறது.

மனிதர்கள் வாக்கிங் செல்வது போல யானைகளும் நடமாடுகிறது. தொடர்ந்து யானை தொல்லை கடுமையாக இருக்கிறது, கடந்த அ.தி.மு.க ஆட்சியில் யானைகள் ஊருக்குள் போகாமல் இருப்பதற்காக அகழிகள் தோண்டி நடவடிக்கை எடுத்து இருந்தோம். தற்போது அந்தக் குழிகள் எல்லாம் மூடப்பட்டு அதையும் தாண்டி யானைகள் ஊருக்குள் புகும் நிலைமை இந்த ஆட்சியில் இருக்கிறது.

அதேபோல கர்நாடகா , கேரளாவில் போடப்பட்டு இருப்பது போல ரயில் தண்டவாளர்கள் அமைக்க என்னுடைய சட்டமன்ற நிதியில் இருந்து கூட ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, அரசாங்க அதிகாரிகளும் அமைச்சர்களும் வந்து பார்வையிட்டு, எட்டு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருப்பதாக கூறிச் சென்றார்கள்.

அந்த நிதிகள் ஒதுக்கப்பட்டு வேலைகள் ஆரம்பித்து பகுதி அளவு முடிந்து இருந்தால் தற்போது மக்கள் இறந்து இருக்க மாட்டார்கள். இந்த விபத்து நிகழாமல் இருந்து இருக்கும் யானையும் உள்ளே வராமல் இருந்து இருக்கும்.

ஆனால் இந்த திட்டங்கள் அனைத்துமே கிடப்பில் போடப்பட்டு அப்படியே இருக்கிறது. சட்டமன்ற நிதியில் ஒதுக்க வேண்டிய தொகையை நான் அப்பொழுதே ஒதுக்கி கொடுத்து விட்டேன். ஆனால் அதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை. அந்தப் பகுதிகளில் இருக்கும் மக்கள் தினம்தோறும் அச்சத்துடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். தினம் தோறும் யானைகள் அங்கு வந்த வண்ணமே உள்ளது.

தொண்டாமுத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் யானைகள் வராத நாட்களே இல்லை. அந்தப் பகுதியில் மட்டுமல்ல தற்போது பாலக்காடு மெயின் ரோடு வரைக்கும் கூட யானைகள் நடமாட்டம் இருக்கிறது.

விவசாயிகளின் பயிருக்கு மட்டுமல்ல உயிருக்கும் ஆபத்தை ஏற்பட்டு இருக்கிறது.

பத்து நாளுக்கு ஒரு உயிர் போய்க் கொண்டே இருக்கிறது.

இந்த அரசு மெத்தனப்போக்கோடு செயல்படுவதாக ஆட்சியரிடம் கூறி இருப்பதாக கூறியவர்,

நீதியரசர்கள் வரும் ஐந்தாம் தேதி இது சம்பந்தமாக ஒரு கமிட்டி ஏற்பாடு செய்து இருக்கிறார்கள். அதில் விவசாயிகள் பொதுமக்கள் சென்று மனு கொடுக்க இருக்கிறார்கள்.

இதற்கு அரசு உடனடியாக பிரச்சனையில் தலையிட்டு, பயிர்கள் சேதப்படாமலும், உயிர் பலியில்லாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

தொண்டாமத்தூர் மட்டுமல்ல மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம் போன்ற தொகுதிகளிலும் இதுபோல கடுமையான பிரச்சனைகள் இருக்கிறது.

கோவை மாவட்ட ஊர் ஓரத்தில் இருக்கும் யானைகளை வனத்திற்குள் அப்புறப்படுத்த வேண்டும். இப்படி தொடர் உயிர் பலி ஏற்பட்டு கொண்டு இருப்பதால் நேற்றைய முன் தினம் மக்கள் இணைந்து சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

ஐந்து மணி நேரம் கழித்து தான் அப்பொழுதும் அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்தனர்.

கோயம்புத்தூர் DFO மக்களையும் மதிப்பதில்லை, அதிகாரிகளையும் மதிப்பதில்லை. சாலை மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த சென்றவர் வேறு மாதிரியாக பேசி இருக்கிறார்.

விவசாயிகள், பொதுமக்களிடம் கடுமையான வார்த்தைகளை பேசி வந்து இருக்கிறார். மக்கள் வரிப் பணத்தில் இருக்கும் அதிகாரிகள் இதுபோல் நடந்து கொள்ளக் கூடாது. இல்லையென்றால் அரசு இதில் உடனடியாக தலையிட்டு அவரை இடமாற்றம் செய்து நல்ல அதிகாரியாக பணி நியமனம் செய்ய வேண்டும்.

எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருக்கும் பொழுது நான் இந்த பகுதியில் அமைச்சராக இருக்கும் போது, வாகனங்கள் வாங்கிக் கொடுத்து இருந்தோம், வேட்டை தடுப்பு காவலர்கள் அதிக அளவில் பணியில் இருந்தார்கள். ஆனால் தற்போது வேட்டை தடுப்பு காவலர்கள் போதிய அளவில் இல்லை, அந்த சமயத்தில் நாங்கள் நிறைய டார்ச் லைட்டுகள் வழங்கி இருந்தோம்.. தற்போது வனம் வழியாக செல்லும் வனத்துறை அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலைமை தான் இருக்கிறது.

கூடுதல் வாகனங்கள் வாங்கித் தர வேண்டும், தொடர்ந்து அங்கு அதிகாரிகள் பணியில் இருக்க வேண்டும். அங்கு தொடர்ந்து வரக் கூடிய ஒரு யானையை அப்புறப்படுத்துவதாக சொல்லிச் சென்றார்கள் தற்போது வரை அதை செய்யவில்லை உடனடியாக அதையும் செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறோம் என்றார்.

உடனடியாக தற்போது தடுப்பு வேலி அமைப்பு தர அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் ஆட்சியில் இருக்கும் போது வெளியிடப்பட்ட சாலைக்கான டெண்டர்கள் தற்போது கிடப்பில் போடப்பட்டு இருக்கிறது. அப்படி கிடப்பில் போடப்பட்டு ரத்து செய்யப்பட்ட டெண்டர்களை எல்லாம், நிதி ஒதுக்கி முடித்து தர வேண்டும். ஸ்மார்ட் சிட்டி திட்டங்களை எடுத்துக் கொண்டால், குளங்களை அழகாக சீரமைத்துக் கொடுத்தோம். ஆனால் தற்போது எல்லா குளங்களிலும் ஆகாயத் தாமரைகள் தான் மிதக்கிறது.

மழைக் காலங்களில் கூட இவர்கள் மருந்து அடிப்பது இல்லை. நிறைய தொற்றுநோய் பரவும் அபாயம் தற்போது இருக்கிறது.

உடனடியாக மருந்துகள் அடித்து குளங்களில் இருக்கும் ஆயகாயத் தாமரைகளை நீக்க வேண்டும். அதேபோல வெள்ளலூர் குப்பை கிடங்கில் நாம் ஆட்சிகள் இருக்கும் பொழுது மருந்து அடித்து துர்நாற்றம் வீசுவதை கட்டுப்படுத்தி இருந்தோம். ஆனால் தற்போது 15 கிலோ மீட்டர் வரை அந்த துர்நாற்றம் வீசுகிறது.

இது போன்ற பிரச்சனைகளையும் உடனடியாக தடுத்து தர வேண்டும். கோவை மாவட்டத்திற்கு திருப்பூரில் இருந்து குப்பைகள் கொண்டு வரப்படுவதாக கூறி இருந்தார்கள் அதை ஆட்சியரிடம் தெரிவித்த போது,

தற்போது வரை அப்படி இல்லை எனக் கூறினார். முதலில் கோவை மாவட்டத்தில் இருக்கும் குப்பைகளை சரியான விதத்தில் தரம் பிரித்து வாங்கி தொற்றுநோய் பரவாமல் செய்ய வேண்டும். கோவை மாவட்டத்தை பொறுத்த வரை மாநகராட்சியின் எந்த பணியும் நடப்பதில்லை. மாநகராட்சி சார்பில் வரி மேல் வரி போட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

அதையெல்லாம் ரத்து செய்ய வேண்டும்.. போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கிறது, இதற்காகத் தான் வெள்ளலூர் பேருந்து நிலையம் தொடங்கினோம் 45 சதவீதம் பணிகள் மட்டுமே நிறைவடைந்து இருக்கிறது, உடனடியாக கிடப்பில் போடப்பட்டு இருக்கும் அந்த பேருந்து நிலைய வேலைகளையும் தொடங்கி போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும். இதையெல்லாம் ஆறு மாதத்திற்குள் செய்து தர வேண்டும் இல்லையென்றால் நிச்சயமா ஆட்சி மாற்றம் ஏற்படும்.

அப்படி ஆட்சி மாற்றம் ஏற்படும் பொழுது எடப்பாடி முதலமைச்சர் ஆகும் பொழுது விடுபட்ட அனைத்து வேலைகளும் மக்களுக்கு செய்து கொடுக்கப்படும். கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சி கோவைக்கு அ.தி.மு.க ஆட்சியில் இருந்தது. எவ்வளவு அதிகமான திட்டங்களை கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு கொண்டு வந்தோமோ ? அவை அனைத்தும் தற்போது சுனக்கத்தில் இருக்கிறது.

மீண்டும் எழுச்சி பயணம் தொடங்க உள்ளது பற்றிய கேள்விக்கு, கோவைக்கு வருகிற ஒன்பதாம் தேதி எடப்பாடி பழனிச்சாமி கோவை வர இருக்கிறார் என்று கூறினார்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவையில் அமலுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதிகள்…

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பைத் தொடர்ந்து, கோவையில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு சிலைகள் மூடல், பேனர்கள் அகற்றல், பறக்கும் படை வாகனங்கள் துவக்கம் உள்ளிட்ட பணிகள் தீவிரமடைந்துள்ளன.

Video

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்து திருப்தியாக சாப்பிட்டு சென்ற யானை…

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த காட்டு யானை சமையலறையில் இருந்த அரிசி, மாவு உள்ளிட்ட உணவுப் பொருட்களை சாப்பிட்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.