கோவை: கோவையில் ISI முத்திரையில்லாத ஹெல்மெட் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்திய தர நிர்ணய அமைவனம் கோயம்புத்தூர் அலுவலகத்தின் சார்பில் ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத தரமற்ற பொருட்கள் விற்பனை குறித்த கண்காணிப்பும், திடீர் ஆய்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் ஐஎஸ்ஐ தர முத்திரை இல்லாத ஹெல்மெட் விற்பனை கடையில் இயக்குனர் கே.ரமேஷ் தலைமையிலான, அதிகாரிகள் வினித் குமார், திவ்யா, கௌதம் சாந்த் சோனி அடங்கிய குழுவினர் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகன ஓட்டிகள் அணியும் ஹெல்மெட்டுகள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதனை அடுத்து தரமற்ற ஹெல்மெட்டை விற்பனைக்காக வைத்திருந்த கடை உரிமையாளர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. BIS சட்டம் 2016, பிரிவு 28ன் படி தரமற்ற பொருட்கள் விற்பனை செய்பவர்களுக்கு சிறை தண்டனை அல்லது பொருட்களின் மதிப்புக்கு ஏற்ப அபராதங்கள் விதிக்கப்படும்.
இதுகுறித்து இந்திய தர நிர்ணய அமைவன அதிகாரிகள் தெரிவிக்கையில், பொதுமக்கள் எந்த ஒரு பொருளை வாங்கும் போதும் அதன் தரத்தை உறுதி செய்யும் வகையில் BIS care app செயலி மூலம் அதன் தரத்தை உறுதி செய்தும், தரக் குறியீடுகள் இருப்பதை பரிசோதனை செய்து வாங்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.



