கோவை: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற மறந்த முதலமைச்சர் விஜய்க்கு வல்லாரை கீரை அனுப்ப முயன்ற தமிழ் புலிகள் கட்சியினரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தேர்தலுக்கு முன்பாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதலமைச்சர் விஜய், தமிழக மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்தார்.
இதனிடையே த.வெ.க. ஆட்சி அமைந்து ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில், தேர்தல் அறிக்கையில் விஜய் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற விமர்சனம் எழுந்து வருகிறது.
இந்த சூழலில், விஜய்க்கு அவரது தேர்தல் அறிக்கைகளை நினைவூட்டும் விதமாக, தமிழ் புலிகள் கட்சியினர் இன்று அவருக்கு வல்லாரை கீரை அனுப்ப வந்தனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தபால் நிலையத்திற்கு வந்த அவர்கள், தபால் மூலமாக முதலமைச்சருக்கு வல்லாரை கீரை அனுப்ப முயன்றனர்.
முன்னதாக, அவர்களைத் தடுக்காத போலீசார், உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தலை தொடர்ந்து, கீரை அனுப்ப வந்த மூவரை கைது செய்தனர்.
இதுகுறித்து, தமிழ் புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் இளவேனில் கூறுகையில்,
பெண்களுக்கு மாதம் ரூ.2,500, மகளிருக்கு இலவச பேருந்து பயணம், மாதத்திற்கு 200 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை முதலமைச்சர் விஜய் கொடுத்திருந்தார்.
ஆனால் ஆட்சிக்கு வந்து ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில் அவர் அளித்த வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றவில்லை.
பொதுவாகவே ஆட்சி அமைக்கும் முதலமைச்சர், ஆட்சி அதிகாரத்திற்கு வந்த உடனேயே பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவார்கள். ஆனால் இங்கு அப்படி எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை.
இதனை செயல்படுத்த மறந்த முதலமைச்சர் விஜய்க்கு வல்லாரை கீரை அனுப்ப முயன்றோம். ஆனால் போலீசார் இதனை தடுத்து நிறுத்துகின்றனர்.
இப்போது இருக்கும் நிலையைப் பார்த்தால் மூன்று மாதங்களில் த.வெ.க. ஆட்சி கவிழும் என்றே தோன்றுகிறது.


