கோவை: கைவினை மற்றும் கலைத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ரூ.3 லட்சம் வரை பிணையமில்லா கடன் மற்றும் ரூ.50 ஆயிரம் வரை மானியம் வழங்கும் கைவினை கலைஞர் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழக அரசு செயல்படுத்தி வரும் இத்திட்டத்தின் மூலம் கைவினைஞர்களுக்கு மேம்பட்ட பயிற்சி, தொழில் வளர்ச்சிக்கான ஆலோசனைகள், சந்தைப்படுத்தல் திறன் மேம்பாடு மற்றும் நிதியுதவி வழங்கப்படுகிறது. கட்டட வேலை, மரவேலை, மண்பாண்டம் தயாரித்தல், நகை செய்தல், தையல், ஓவியம், சிற்பம், இசைக்கருவி தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு கலை மற்றும் கைவினைத் தொழில்களில் ஈடுபட்டுள்ளோர் இத்திட்டத்தில் பயன் பெறலாம்.
தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ரூ.3 லட்சம் வரை பிணையமில்லா கடன் வழங்கப்படுவதுடன், கடன் தொகையில் 25 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படும். மேலும், கடனை திருப்பிச் செலுத்தும் காலத்தில் 5 சதவீதம் வரை வட்டி மானியமும் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில் சேர விரும்புவோர் 35 வயதுக்கு மேற்பட்டவராகவும், சம்பந்தப்பட்ட தொழிலில் குறைந்தது 5 ஆண்டுகள் அனுபவம் கொண்டவராகவும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்களது புகைப்படம், ஆதார் அட்டை, தொழில் அனுபவச் சான்று மற்றும் திட்ட அறிக்கையுடன் விண்ணப்பிக்கலாம்.
கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த கைவினைஞர்கள் http://www.msmeonline.tn.gov.in இணையதளம் மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.


