கோவை: கோவை மாநகர போலீசார் பள்ளி நிறுவனங்களுக்கு மின்சாரம், பேருந்து, பாதுகாப்பு வசதிகளை ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளது.
கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட உள்ளது. மேலும், தென்மேற்கு பருவமழைக்காலம் தொடங்க உள்ளதால் கோவையில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கோவை மாநகர போலீசார் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக மாநகர போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பள்ளிகள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு திறக்கப்படுகிறது. இதனால் பள்ளி வளாகத்தில் உள்ள மின்சாரம் தொடர்பான அனைத்து சாதனங்களையும் முறையாகப் பரிசோதித்து, அவை பாதுகாப்பான முறையில் சரியாக உள்ளதா என்பதை நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.
பள்ளி மைதானங்கள் மற்றும் மாணவர்களின் விளையாட்டு உபகரணங்கள் ஏதேனும் சேதமடைந்துள்ளதா என்பதை ஆய்வு செய்து, அவை முற்றிலும் பாதுகாப்பான முறையில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
பள்ளிப் பேருந்துகள் மற்றும் வாகனங்களில் உள்ள அனைத்து கட்டமைப்பு வசதிகளும், அவசரக்கால வழிகளும் சரியாகச் செயல்படுகின்றனவா என்பதைச் சரிபார்க்க வேண்டும்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்து வரும்போதும், அழைத்துச் செல்லும்போதும் பள்ளிக்கு முன்பு எவ்வித போக்குவரத்து நெரிசலும் ஏற்படாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்.
பள்ளி மாணவர்களின் பாதுகாப்பிற்கு முதலிடம் கொடுத்துச் செயல்பட வேண்டும். இது குறித்துப் பள்ளி வளாகக் காவலர்களுக்கு, நிர்வாகம் உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும்.
மாநகர போலீசாரின் இந்த எச்சரிக்கை மற்றும் வழிகாட்டுதல்களைப் பள்ளிகள் தீவிரமாகப் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


