கோவை: கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், கோவை மாநகராட்சிக்குட்பட்ட பள்ளிகளில் தூய்மைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த பணிகளை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் இன்று நேரில் ஆய்வு செய்தார்.
கோவை மாநகராட்சிக்குட்பட்ட 17 மேல்நிலைப்பள்ளிகள், 10 உயர்நிலைப்பள்ளிகள், 37 நடுநிலைப்பள்ளிகள், 84 ஆரம்பப்பள்ளிகள் மற்றும் ஒரு சிறப்பு பள்ளி உள்ளிட்ட மொத்தம் 148 மாநகராட்சி பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளதால், மாநகராட்சி கமிஷனரின் அறிவுறுத்தலின்படி அனைத்து பள்ளிகளிலும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி, வகுப்பறைகள், கழிவறைகள், குடிநீர் தொட்டிகள் மற்றும் பள்ளி வளாகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் சுத்தப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில், கோவை மணியகாரன்பாளையம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் தூய்மைப் பணிகளை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.



