கோவை: கோவையில் நேற்று வெளுத்து வாங்கிய சூறாவளிக் காற்றால் துடியலூர் பகுதிகளில் சாலையில் பறந்த கடைகளின் மேற்கூரைகள். மரங்களும் சாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை புறநகர்ப் பகுதிகளான துடியலூர், வடமதுரை மற்றும் தடாகம் சாலை உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை திடீரென வீசிய சூறாவளிக் காற்று மற்றும் பலத்த மழை காரணமாக பல இடங்களில் கடைகளின் மேற்கூரைகள் காற்றில் பறந்தன. மேலும், மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன.
கோடைக்காலம் முடிந்து தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்பட்டு வரும் நிலையில், கோவையின் பல்வேறு பகுதிகளில் நேற்று பிற்பகலுக்குப் பிறகு வானிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. மாலை நேரத்தில் கருமேகங்கள் சூழ்ந்து, யாரும் எதிர்பாராத விதமாக பயங்கர சத்தத்துடன் சூறாவளிக் காற்று வீசத் தொடங்கியது.
துடியலூர் மற்றும் தடாகம் பிரதான சாலைப் பகுதிகளில் வீசிய அதிவேக சூறாவளிக் காற்றைத் தாங்க முடியாமல், சாலையோரத்தில் இருந்த வணிக வளாகங்கள் மற்றும் தற்காலிகக் கடைகளின் மேற்கூரைகளான தகர ஷீட்டுகள் (Asbestos & Tin Sheets) பெயர்ந்து காற்றில் தூக்கி வீசப்பட்டன.
திடீரென பறந்து வந்த கூரைகளைக் கண்டு அப்பகுதி மக்கள் அலறியடித்து பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்தனர்.
VIDEO FOOTAGE
தடாகம் சாலைப் பகுதியில் காற்றின் வேகம் மிக அதிகமாக இருந்ததால், மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. சில இடங்களில் மின் கம்பங்களும் சாய்ந்ததால், அப்பகுதிகள் இருளில் மூழ்கின.
இதையடுத்து, மின்வாரிய ஊழியர்கள் போர்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு மின் விநியோகத்தை மீட்டெடுத்தனர்.
நேற்று வீசிய இந்த திடீர் சூறாவளிக் காற்றால் கோவையின் வடக்கு புறநகர்ப் பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.


