கோவை: கோவைப்புதூரில் அரை நிர்வாணமாக கிடந்த பெண் வழக்கில் அவரது கணவரை மதுக்கரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டம், மதுக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த ஜூன் 24, ஆம் தேதி இளம்பெண் ஒருவர் நிர்வாண நிலையில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக மதுக்கரை போலீசார் முதலில் சந்தேக மரணமாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையின் போது, உயிரிழந்த பெண்ணின் கணவர் ஜெகனபிரதான் (23) சம்பவத்திற்குப் பிறகு தலைமறைவாக இருந்தது தெரியவந்தது. அவரை கைது செய்ய தனிப்படை போலீசார் பல்வேறு மாநிலங்களில் தேடுதல் வேட்டை நடத்தினர்.
இதையடுத்து, ஒடிசா மாநிலத்தில் பதுங்கியிருந்த ஜெகனபிரதானை தனிப்படை போலீசார் கைது செய்து, இன்று கோவைக்கு அழைத்து வந்தனர். அவரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், தனது மனைவி செல்போனில் அடிக்கடி பேசி வந்ததை சந்தேகித்து ஏற்பட்ட குடும்பத் தகராறில் ஆத்திரமடைந்து, கழுத்தை நெரித்து கொலை செய்ததாக தெரிவித்துள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
காதலிக்கு மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் பலாத்காரம்; கோவையில் கொடூரம்!
இதனைத் தொடர்ந்து, சந்தேக மரணமாக பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட ஜெகனபிரதானை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்றக் காவலில் அடைக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், செல்போனில் அடிக்கடி பேசி வந்ததால் குடும்பத் தகராறில் ஆத்திரமடைந்து மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக அவர் தெரிவித்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சந்தேக மரண வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.


