கோவை: மூன்று மத குருமார்களையும் வைத்து எம்எல்ஏ அலுவலகத்தை திறந்தார் அமைச்சர் சம்பத்குமார்.
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் துறை அமைச்சரும் கோவை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சம்பத்குமார் மூன்று மத குருமார்களை கொண்டு எம்எல்ஏ அலுவலகத்தை திறந்தார்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிந்ததை தொடர்ந்து அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அவரவர்களுக்கான சட்டமன்ற அலுவலகங்கள் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்படுகிறது. அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் சட்டமன்ற அலுவலகங்கள் புதுப்பிக்கப்பட்டவுடன் அதனை திறந்து வைத்து எம்எல்ஏ பணிகளை ஆற்றி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரும் கோவை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சம்பத்குமார் க்கான வடக்கு தொகுதி சட்டமன்ற அலுவலகம் புதுப்பிக்கப்பட்டு இன்று திறக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் அமைச்சர் சம்பத்குமார் இந்து கிறிஸ்த்துவம் இஸ்லாம் ஆகிய மூன்று மதங்களையும் ஏற்றுக் கொள்ளும் விதமாக மூன்று மத குருமார்களை வைத்து சட்டமன்ற அலுவலகத்தை திறந்தார். பின்னர் மூன்று பேரிடமும் ஆசி பெற்று அலுவலகத்தில் அவரது பணிகளை துவக்கினார். இந்த நிகழ்வில் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் சுகுமார், கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் ஆகியோரும் கலந்துகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

மேலும் இந்த நிகழ்வில் தூய்மை பணியாளர் சக்திவேலை அமைச்சர் சம்பத்குமார் பாராட்டி பரிசுகளை வழங்கினார். தூய்மை பணியாளர் சக்திவேல் உரிமையாளர் தவறவிட்ட மூன்று பவுன் தங்கச் சங்கிலியை உரிமையாளரிடமே மீட்டுக் கொடுத்தவர் என்பதும் அவரது செயலை மாநகராட்சி ஆணையாளர் உட்பட பலரும் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.



