பாதாள சாக்கடை குழியில் சிக்கிய கல்லூரி பேருந்து: மாநகராட்சி அலட்சியத்தால் பரபரப்பு

கோவை : கோவை சிங்காநல்லூர் அருகே சரிவர மூடப்படாமல் இருந்த பாதாள சாக்கடைத் திட்டக் குழியில் தனியார் கல்லூரி பேருந்து சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேருந்தில் இருந்த மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

கோவை நீலாம்பூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி மற்றும் கல்லூரிக்குச் சொந்தமான பேருந்து, இன்று மாலை மாணவர்களை ஏற்றிக்கொண்டு சிங்காநல்லூர், உப்பிலிபாளையம், ஜி.வி. ரெசிடென்சி வழியாகச் சென்று கொண்டிருந்தது.

Advertisement

அப்போது சாலையோரத்தில் பாதாள சாக்கடைத் திட்டப் பணிக்காக தோண்டப்பட்டு தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பகுதியில் பேருந்து சென்றபோது, மண் திடீரென சரிந்து பேருந்தின் முன்சக்கரம் குழிக்குள் சிக்கியது. இதனால் பேருந்து ஒருபுறமாக சாய்ந்ததால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்து அலறினர்.

ஓட்டுநர் சாதுர்யமாக செயல்பட்டதால் பேருந்து முழுமையாக கவிழாமல் தப்பியது. உடனடியாக மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பாக பேருந்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

கோவை மாநகரில் பாதாள சாக்கடை, 24 மணி நேர குடிநீர் திட்டம், கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக சாலைகள் தோண்டப்பட்டு வருகின்றன. ஆனால், பணிகள் முடிந்த பின்னரும் பல இடங்களில் குழிகள் முறையாக மூடப்படாததுடன், சாலைகளும் பழைய நிலைக்கு சீரமைக்கப்படவில்லை என்று பொதுமக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

சிறிய மழை பெய்தால்கூட சாலைகள் சேறும் சகதியுமாக மாறி, குழிகள் தெரியாத நிலை உருவாகுவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில், மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்தில் சிக்கிய சம்பவம் மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தை மீண்டும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

இதுபோன்ற விபத்துகள் மீண்டும் நடைபெறாமல் இருக்க, தோண்டப்பட்ட அனைத்து சாலைகளையும் உடனடியாக சீரமைத்து, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தியுள்ளனர்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

ஈஷா – கங்கா மருத்துவமனை இணைந்து இலவச மார்பகப் புற்றுநோய் பரிசோதனை முகாம்

ஈஷா ஆதியோகி வளாகத்தில் நடைபெற்ற இலவச மார்பகப் புற்றுநோய் பரிசோதனை முகாமில், 100-க்கும் மேற்பட்ட கிராமப்புற மற்றும் பழங்குடியின பெண்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Video

ஜிடி மேம்பாலத்தில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்ட இளம் பெண்கள்…

கோவை: கோவை அவிநாசி சாலை ஜி.டி மேம்பாலத்தில் கார் சன்ரூஃபில் ஆபத்தான முறையில் அமர்ந்து சென்ற 4 இளம்பெண்களின் வீடியோ வைரலாகி வருகிறது. கோவை - அவிநாசி சாலையில் உள்ள ஜி.டி மேம்பாலத்தில், நள்ளிரவுக்குச்...