கோவை : கோவை சிங்காநல்லூர் அருகே சரிவர மூடப்படாமல் இருந்த பாதாள சாக்கடைத் திட்டக் குழியில் தனியார் கல்லூரி பேருந்து சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேருந்தில் இருந்த மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
கோவை நீலாம்பூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி மற்றும் கல்லூரிக்குச் சொந்தமான பேருந்து, இன்று மாலை மாணவர்களை ஏற்றிக்கொண்டு சிங்காநல்லூர், உப்பிலிபாளையம், ஜி.வி. ரெசிடென்சி வழியாகச் சென்று கொண்டிருந்தது.
அப்போது சாலையோரத்தில் பாதாள சாக்கடைத் திட்டப் பணிக்காக தோண்டப்பட்டு தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பகுதியில் பேருந்து சென்றபோது, மண் திடீரென சரிந்து பேருந்தின் முன்சக்கரம் குழிக்குள் சிக்கியது. இதனால் பேருந்து ஒருபுறமாக சாய்ந்ததால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்து அலறினர்.
ஓட்டுநர் சாதுர்யமாக செயல்பட்டதால் பேருந்து முழுமையாக கவிழாமல் தப்பியது. உடனடியாக மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பாக பேருந்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
கோவை மாநகரில் பாதாள சாக்கடை, 24 மணி நேர குடிநீர் திட்டம், கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக சாலைகள் தோண்டப்பட்டு வருகின்றன. ஆனால், பணிகள் முடிந்த பின்னரும் பல இடங்களில் குழிகள் முறையாக மூடப்படாததுடன், சாலைகளும் பழைய நிலைக்கு சீரமைக்கப்படவில்லை என்று பொதுமக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.
சிறிய மழை பெய்தால்கூட சாலைகள் சேறும் சகதியுமாக மாறி, குழிகள் தெரியாத நிலை உருவாகுவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில், மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்தில் சிக்கிய சம்பவம் மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தை மீண்டும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
இதுபோன்ற விபத்துகள் மீண்டும் நடைபெறாமல் இருக்க, தோண்டப்பட்ட அனைத்து சாலைகளையும் உடனடியாக சீரமைத்து, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தியுள்ளனர்.


