கோவை: கோவையில் டாக்சியில் ஏறிய பெண் பயணி ஒருவர், டிரைவர் தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றதாக கூறி ஆர்ப்பாட்டம் செய்த நிலையில், அது பொய் என்பது வீடியோ மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கார் டிரைவர் மணிகண்டன். இவர் கடந்த 3ம் தேதி இரவு, கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள நட்சத்திர விடுதியில் இருந்து பெண் பயணி ஒருவரை தனது காரில் அழைத்துச் சென்றார். அந்த பெண் பயணியுடன் வந்திருந்த ஆண் நண்பரும் அந்த காரில் பயணம் செய்தார்.
அந்த பயணத்தின் போது காரை ஓரமாக நிறுத்திவிட்டு, டிரைவரை காரில் இருந்து கொஞ்ச நேரம் இறங்குமாறு கூறியுள்ளனர். ஆனால் பாதுகாப்பு காரணங்களால் டிரைவர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பெண் பயணி அந்த டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றதாக போலீசில் புகார் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த டிரைவர், அங்கு நடப்பவற்றை வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
இந்த பிரச்சனையில் போலீசார் தலையிட்டு நடவடிக்கை எடுக்கட்டும் என்று, அந்த காரை டிரைவர் பீளமேடு காவல் நிலையம் நோக்கி இயக்கினார். அப்போது அந்த பெண் பயணி திடீரென காரின் கதவைத் திறந்து இறங்கிவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
மேலும், கார் பீளமேடு அருகே சென்று கொண்டிருந்த போது அந்த பெண் காரில் இருந்தபடியே கூச்சலிட்டுள்ளார். இதனால் அங்கிருந்த தனியார் கல்லூரி அருகே டிரைவர் காரை நிறுத்தினார். தொடர்ந்து அந்த பெண் போட்ட கூச்சலில், பொதுமக்களும் அங்கு திரண்டனர். மேலும், அந்த பெண் அங்கிருந்த கற்களை எடுத்து கார் கண்ணாடியையும் உடைத்துள்ளார்.
Also Read: கோவை மக்களே… இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு…!
இந்த சம்பவத்தால் மனம் நொந்துபோன டிரைவர், ஆட்டோ மூலம் பீளமேடு காவல் நிலையம் சென்று புகார் அளித்தார். புகாரில் அந்த பெண் பயணியின் நடத்தையை வைத்து பார்க்கையில் அவர் மதுபோதையில் இருப்பது தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சம்பவத்திற்குப் பிறகு தனது வாகனத்தை சோதனை செய்தபோது, அதில் இருந்த செல்போன் மற்றும் ரூ.2,500 ரொக்கப் பணம் காணாமல் போயிருந்ததாகவும் தெரிவித்துள்ளார். எனவே மிரட்டல், தாக்குதல், அவதூறு, வாகன சேதம் மற்றும் காணாமல் போன பொருட்கள் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
வீடியோ காட்சிகள்
இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அப்பாவி டிரைவர் மீது அந்த பெண் பயணி போலி குற்றச்சாட்டுகளை வைத்ததாகவும், டிரைவர் எடுத்த வீடியோ காட்சிகள் மூலம் உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து பொதுமக்கள் பலரும் அந்த பெண்ணின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


