கோவை : கோவை உக்கடம் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து மோதி படுகாயமடைந்த 52 வயது நபர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
கோவை செட்டிபாளையம், போத்தனூர் ரோடு பகுதியைச் சேர்ந்த விஸ்வநாதன் (52), கடந்த ஜூன் 27-ஆம் தேதி மாலை உக்கடம் பேருந்து நிலையத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, கோவையிலிருந்து பழனி நோக்கி புறப்பட இருந்த அரசு பேருந்து, சாலையைக் கடக்க முயன்ற விஸ்வநாதன் மீது மோதியதாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் அவர் தூக்கி வீசப்பட்டு, இரு கால்கள், கழுத்து மற்றும் தலைப்பகுதியில் பலத்த காயமடைந்தார்.
சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் மற்றும் பயணிகள் உடனடியாக அவரை மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி விஸ்வநாதன் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்திற்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



