கோவை: மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து, இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி செயலாளருக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
கோவை செல்வபுரம் முத்துசாமி காலனியைச் சேர்ந்தவர் சூர்யா என்ற சூரிய பிரசாத். இவர் கோவை ரயில் நிலையம் முன்பு ஆட்டோ ஓட்டி வந்தவர். மேலும் இந்து முன்னணி அமைப்பின் செல்வபுரம் நகர தலைவராகவும் இருந்து வந்துள்ளார். தற்பொழுது இந்து மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், 2021 மே 27-ம் தேதி கோவை ரயில் நிலைய ஆட்டோ ஸ்டாண்டில் சூர்யாவுக்கும், மற்றொரு ஆட்டோ ஓட்டுநரான பைசலுக்கும் இடையே பயணிகளை ஏற்றுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த சூர்யா, மறைத்து வைத்திருந்த கத்தியால் பைசலை குத்தியதாக கூறப்படுகிறது.
இதில் பலத்த காயமடைந்த பைசல், அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் கொலை முயற்சி மற்றும் கொலை மிரட்டல் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு கோவை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில் சூர்யாவுக்கு 2½ ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதம், மேலும் கொலை மிரட்டல் குற்றத்துக்கு 6 மாத சிறை மற்றும் ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது.
இதற்கு எதிராக அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து கீழமை நீதிமன்றம் வழங்கிய தண்டனை உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்தது. போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.



