கோவை: வேலை நிறுத்த போராட்டத்தால் ஜேசிபி வாகனங்கள் கோவையில் அணிவகுத்து நிற்கின்றன.
தமிழ்நாடு முழுவதும் எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் நல சங்கத்தினர் நேற்று முதல் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 25ஆம் தேதி வரை இந்த வேலை நிறுத்தம் தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இவர்களது சங்கத்திற்கு உட்பட்ட உரிமையாளர்கள் மற்றும் உறுப்பினர்களின் ஜேசிபி, ஈச்சர் போன்ற வாகனங்கள் இயக்கப்படாமல் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசு எரிபொருள் விலை, மூலப்பொருட்கள் விலையை குறைக்க வேண்டும், வரி வகைகளில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும், நடைமுறை சிக்கல்களை தீர்ப்பதற்கு தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்த போராட்டமானது நடைபெறுகிறது.
அதன் ஒரு பகுதியாக கோவையில் சரவணம்பட்டி பகுதியில் உள்ள காலி இடத்தில் கோயமுத்தூர் மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் அவர்களது வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளனர். இன்று கோவை மாவட்ட நலச்சங்க தலைவர் சந்திரசேகர், பொருளாளர் ரவிசந்திரன், செயலாளர் சசிகுமார், துணை தலைவர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய அவர், டீசல், ஆயில், உதிரி பாகங்கள் விலையேற்றத்தின் காரணமாக இந்த வேலை நிறுத்தம் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டதாகவும் பொதுமக்களும் கட்டுமான பணியாளர்களும் தங்களுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
கனிமவளத் துறையின் மூலம் ஒரு சில இடையூறுகள் தங்களுக்கு நேரிடுவதாகவும் குறைந்த அளவிலான லோடுகளை எடுக்கும் பொழுது அதற்கு பர்மிட் கேட்கப்படுகிறது ஆனால் அந்த பிரமிட் தங்களுக்கு கிடைப்பதில்லை என்று வேதனை தெரிவித்தனர். சட்ட திட்டத்திற்கு உட்பட்டு நாங்கள் செயல்படுவதற்கு தயாராக இருக்கிறோம் அதற்காக சில நடைமுறைகளை எளிமைப்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
புதிய வாகனங்களை வாங்கும் பொழுது 15 ஆண்டுகளுக்கு வரி வசூல் செய்யப்படுவதாகவும் அப்படி இருக்கும் பட்சத்தில் ஒன்னிரண்டு ஆண்டுகள் கழித்து அந்த வாகனங்களை விற்கும் பொழுது சில சிக்கல்கள் ஏற்படுவதாக சுட்டிக்காட்டிய அவர்கள் பழைய நடைமுறையை மீண்டும் பின்பற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
எங்களுடைய தொழில் அரசாங்கத்திற்கு மிகப்பெரிய வருவாயை ஈட்டி தரக்கூடிய தொழில் எனவே எங்கள் தொழில் மீது அரசு கவனம் செலுத்தி எங்களுடைய பிரச்சனைகளை தீர்த்து தர வேண்டும் தங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்து பேசி தங்களுடைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினர்.
தங்களுக்கு ஏற்றப்பட்டுள்ள இந்த விலை ஏற்றம் என்பது சாமானிய மக்களிடம் தான் விடியும் என்று கூறிய அவர்கள் தங்களையும் தங்கள் தொழிலையும் பொதுமக்களையும் கருத்தில் கொண்டு தங்கள் கோரிக்கைகள் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். சட்டதிட்டத்திற்கு உட்பட்டு அதற்கான தொகையை செலுத்தி வேலை செய்வதற்கு எங்கள் சங்கம் தயாராக இருக்கிறது ஆனால் வரைமுறைப்படுத்தி கொடுப்பதற்கு அதிகாரிகள் தயாராக இல்லை என்றும் கூறினர்.
தற்போதைய சூழலில் தேசிய வங்கிகளில் பெற்ற கடனை செலுத்த முடியாத நிலை இருப்பதாகவும் தங்களது குடும்பங்களை அரசாங்கம் காக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். உற்பத்தியாளர்கள் அவர்களுடைய லாப நோக்கத்திற்காக அதிகமான லோடுகளை ஏற்றி விட்டுவிடுகிறார்கள் அந்த மாதிரியான சூழலில் தங்களுக்கு தான் அபராதங்கள் விதிக்கப்படுவதாகவும் அரசாங்கம் உற்பத்தியாளர்களுக்கு இது குறித்து வரைமுறைப்படுத்தி செயல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
மத்திய அரசிடம் வரி சம்பந்தமான ஓரிரு கோரிக்கைகளை முன்வைத்த அவர்கள் புதிய வாகனங்களுக்கு 15 ஆண்டுகள் வரி விதிப்பதை ரத்து செய்ய வேண்டும் என்றும் இன்சூரன்ஸ் தொகையும் ஆண்டுக்காண்டு அதிகமாகிக் கொண்டிருப்பதை கட்டுப்படுத்த வேண்டும் என கோரினர்.
கடந்த ஆட்சியில் ராயல்டி என்கின்ற டீம் பர்மிட் கிடைக்க வழிவகை செய்தார்கள் என கூறிய போது ராயல்டி டீம் என்றால் என்ன எவ்வாறு பணம் செலுத்தினீர்கள் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு அதை எவ்வாறு கூறுவது என்று தெரியவில்லை கடந்த ஆட்சியில் இரு வேறு வகைகளாக வாங்கினார்கள் ஒரு சில விஷயங்களை வெளிப்படையாக எங்களால் பேசிவிட முடியாது என பதில் அளித்தனர்.
தொடர்ந்து பேசிய அவர்கள் கடந்த ஆட்சியில் நேரடியாக பர்மிட் கிடைக்காமல் ராயல்டி டீம் என்ற குழு பர்மிட் கிடைப்பதற்கு எளிமையாக வழி வகைகளை செய்து தந்ததாகவும் அவர்களுக்கு பணம் செலுத்தி நாங்கள் அந்த பர்மீட்டுகளை எடுத்து வந்ததாகவும் ஆனால் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு அந்த ராயல்டி டீம் இல்லாமல் பர்மிட் தொகை முழுவதும் அரசாங்கத்திற்கு சென்று விடுகிறது என்றனர். தற்போதைய ஆட்சியில் சிறிய லோடுகளை எடுப்பதற்கு பர்மிட் கேட்டால் அப்படி ஒரு அனுமதியே கிடையாது என்று அதிகாரிகள் கூறுவதாகவும் எனவே அதற்கான தீர்வை ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.
கடந்த ஆட்சியில் இடைத்தரகர்கள் இருந்தார்கள் தற்போதைய ஆட்சியில் இடைத்தரகர்கள் இல்லை அது நல்லது தான் அதேசமயம் தங்களுக்கு பர்மிட் கிடைப்பதற்கான எளிய வழி வகைகளை அரசாங்கம் ஏற்படுத்தி தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
கடந்த ஆட்சியில் அந்த ராயல்டி டீம் எந்த விதிகளின் கீழ் இருந்தார்கள் என்று தெரியவில்லை ஆனால் தங்களுக்கு பர்மிட் கிடைப்பதற்கு எளிமைப்படுத்தி கொடுத்தார்கள் அவர்கள் அதனை எவ்வாறு பெற்றார்கள் என்று தெரியவில்லை ஆனால் அவர்கள் லீகலாகத்தான் பர்மிட் பெற்றுக் கொடுத்ததாத்கள் என்றனர்.
இந்த அரசாங்கத்தில் சட்ட விதிமுறையை செயல்படுத்தும் பொழுது நடைமுறை சிக்கல்கள் என்பதுதான் பெரும் பிரச்சனையாக இருப்பதாகவும் அதனை சரி செய்து கொடுத்தால் பிரச்சனை சரியாகிவிடும் அதற்கான தீர்வை காண்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.



