கோவை: கோவை மாவட்ட ஆட்சித்தலைவருக்கு தொடர் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில்
அரசு வழக்கறிஞர்கள் இன்னும் நியமிக்கப்படாத நிலையில் , 8 வழக்குகளில் அரசு வழகறிஞர் ஆஜராகாததால் கோவை மாவட்ட ஆட்சித்தலைவருக்கு ஒரே நாளில் 62,000 ரூபாய் அபராதம் விதித்து 5 வது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் பணியாற்றிய வந்த அரசு வழகறிஞர்களின் பணிக்காலம் கடந்த ஜூன் மாதம் 30-ந்தேதியுடன் நிறைவடைந்தது. கோவையிலும் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர்கள் பணிக்காலம் முடிவடைந்துள்ளது. அதனை தொடர்ந்து புதிய அரசு வழக்கறிஞர்களுக்கான உத்தரவுகள் இன்னும் வழங்கப்படாததால் நீதிமன்றத்தில் பொறுப்பு ஏற்க முடியவில்லை.
இதன் காரணமாக நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகள் பாதிக்கப்படுவதாக பல்வேறு வழக்கறிஞர்கள், வழக்காடிகள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், 5 வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் 8 வழக்குகளில் கூடுதல் அரசு வழகறிஞர்கள் ஆஜராகாததால் மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமாருக்கு 62,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கருமத்தம்பட்டி கொலை வழக்கு, ரேஸ்கோர்ஸ் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் என விசாரணைக்கு வந்த மொத்தம் எட்டு வழக்குகளில் அரசு வழக்கறிஞர்கள் இல்லாததால் 62 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து 5 வது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி சிவக்குமார் உத்தரவிட்டார்.


