கோவை: கோவை மாவட்டத்தில் சாலை விபத்துகளை குறைக்கும் நோக்கில், விபத்து அதிகம் நடைபெறும் 40 ‘ஹாட் ஸ்பாட்’ பகுதிகளை அடையாளம் கண்டு விரிவான ஆய்வு மேற்கொள்ள போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் சாலை விபத்துகளை குறைக்கும் நோக்கில், விபத்துகள் அதிகம் நடைபெறும் 40 ‘ஹாட் ஸ்பாட்’ பகுதிகளை அடையாளம் கண்டு விரிவான ஆய்வு மேற்கொள்ள போலீசார் முடிவு செய்துள்ளனர்.
சாலை விபத்துகளை தடுக்க நீண்டகால நடவடிக்கையாக, மாவட்ட நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறை, உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றுடன் இணைந்து காவல்துறையினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, தொடர்ந்து விபத்துகள் நடைபெறும் இடங்கள், விபத்துகளுக்கான முக்கிய காரணங்கள், அதிக விபத்துகள் நிகழும் நேரம் உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட உள்ளன.
மேலும், சாலைகளின் அகலம், அபாயகரமான வளைவுகள், சந்திப்புகள், வேகக் கட்டுப்பாட்டு வசதிகள், எச்சரிக்கை பலகைகள், தெருவிளக்குகள், சாலை மார்க்கிங், மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கும் பகுதிகள், சேதமடைந்த சாலைகள் மற்றும் விலங்குகள் அடிக்கடி சாலையை கடக்கும் இடங்கள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் ஆய்வு செய்யப்படவுள்ளன.
இந்த ஆய்வின் அடிப்படையில் தேவையான சாலை பாதுகாப்பு வசதிகள் மேம்படுத்தப்படுவதுடன், விபத்துகள் அதிகம் நடைபெறும் பகுதிகளில் போலீஸ் ரோந்து, வாகன தணிக்கை மற்றும் போக்குவரத்து விதிமீறல்களுக்கு எதிரான நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முதற்கட்டமாக பெரியநாயக்கன்பாளையம், சூலூர், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் அடையாளம் காணப்பட்ட 40 ‘ஹாட் ஸ்பாட்’ இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டு, அங்குள்ள குறைபாடுகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
இந்தாண்டு ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரை கோவை மாவட்டத்தில் 1,501 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன. இதில் 367 விபத்துகளில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதுடன், 1,134 விபத்துகளில் உயிரிழப்பு ஏற்படவில்லை. மொத்தம் 1,660 பேர் பல்வேறு காயங்களுடன் சிகிச்சை பெற்றுள்ளனர்.





