கோவை: கோவையில் போதை மாத்திரை மற்றும் கஞ்சா விற்ற இளைஞர்களுக்கு நீதிமன்றம் கடுங்காவல் சிறை தண்டனை விதித்தது
கோவை போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் 2ம் தேதி ஒரு ரகசிய தாகவல் கிடைத்தது. அதில் கருமத்தம்பட்டி 4 ரோடு மேம்பாலத்திற்கு கீழ் உள்ள அன்னூர் பேருந்து நிறுத்தம் அருகே ஒருவர், போதை மாத்திரைகளையும், கஞ்சாவையும் கடத்தி வந்து விற்பனை செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்து சென்று கண்காணித்து கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த சந்தேகத்திற்கு வாலிபரை போலீசார் பிடித்து சோதனை செய்தனர். அதில் அவரிடம் 4 கிலோ 400 கிராம் 15 எம்டிஎம்ஏ போதை மருந்து மாத்திரைகள் மற்றும் 500 கிராம் கஞ்சா இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், பாலக்காட்டை சேர்ந்த முகமது இர்பான் (20) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவருக்கு போதை பொருட்களை கொடுத்தது திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த தம்ஜித் மக்பூல் (21) என்பதும் தெரிந்தது.
இதையடுத்து போலீசார் முகமது இர்பானை கைது செய்து தம்ஜித் மக்பூல்லை தேடி வந்தனர். அப்போது அவரை போலீசார் கருமத்தம்பட்டி பகுதியில் வைத்து மடக்கி பிடித்தனர். அவரிடமிருந்தும் 500 கிராம் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டது.
இது தொடர்பாக போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை கோவை போதை பொருள் தடுப்பு நீதிமன்றம் விசாரணை நடத்தி வந்தது. இதையடுத்து நீதிபதி ராஜலிங்கம் நேற்று தீர்ப்பு வழங்கினார்.
அதில் முகமது இர்பானுக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும், கட்ட தவறினால் 6 மாதம் சிறையும், தம்ஜித் மக்பூலுக்கு ஓராண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், கட்ட தவறினால் 3 மாதம் சிறையும் விதித்து உத்தரவிட்டார்.
அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் சிவகுமார் ஆஜரானார்.


