கோவை: காலி இடத்திற்கு வரி நிர்ணயம் செய்வதற்கு ரூ.40 ஆயிரம் லஞ்சம் பெற்ற கோவை மாநகராட்சி பெண் வரி வசூலிப்பாளர் கைது செய்யப்பட்டார்.
காலி இடத்திற்கு வரி நிர்ணயம் செய்வதற்காக ரூ.40 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கோவை மாநகராட்சி பெண் வரி வசூலிப்பாளரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாகப் பிடித்தனர்.
கோவை மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் யமுனாதேவி என்பவர் வரி வசூலிப்பாளராகப் பணியாற்றி வருகிறார். பிரகாஷ் என்பவர் தனது காலி இடத்திற்கு வரி விதிப்பு மேற்கொள்வதற்காக மாநகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.
இப்பணியை முடித்துக் கொடுக்க பிரகாஷிடம் யமுனாதேவி ரூ.40 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத பிரகாஷ், இதுகுறித்து கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்தார்.
போலீசாரின் ஆலோசனையின்படி, இரசாயனம் தடவிய பணத்தை பிரகாஷ் எடுத்துச் சென்றுள்ளார். அப்போது, அப்பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் அமர்ந்து பிரகாஷிடம் இருந்து ரூ.40 ஆயிரம் லஞ்சப் பணத்தை யமுனாதேவி வாங்கியபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரை கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர்.
தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.





