கோவை: கோவை, கம்பாலப்பட்டியில் 5.94 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் குடிநீர் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைமலை ஊராட்சி ஒன்றியம் கம்பாலப்பட்டியில் ரூ.5.94 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் குடிநீர் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் கிரியப்பனவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆனைமலை மற்றும் பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதிகளின் கீழ் வரும் ஒடியங்குடி வட்டம், கம்பாலப்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள 24 ஊரக குடியிருப்புகளுக்கு குடிநீர் வசதியை மேம்படுத்தும் நோக்கில், “உங்கள் தொகுதி முதலமைச்சர்” (UTM) திட்டம் 2024-2025-ன் கீழ் ரூ.5.94 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இத்திட்டத்தின் கீழ், 4.5 மீட்டர் விட்டம் கொண்ட ஒரு நீர் சேகரிப்பு தொட்டியும். 12மீ x 6மீ அளவில் மூன்று நீர் இறைப்பு அறைகள் மற்றும் மேம்பாலங்களும் கட்டப்படுகின்றன. இதனுடன், 200 மி.மீ முதல் 150 மி.மீ விட்டம் வரையிலான மொத்தம் 8.665 கிலோமீட்டர் நீளம் கொண்ட பழுதடைந்த குடிநீர் விநியோக குழாய்கள் புதிதாக மாற்றப்படுகின்றன. மேலும், 1300 LPM திறன் கொண்ட ஒரு VT மோட்டாரும், 1000 LPM, 150 LPM மற்றும் 125 LPM திறன் கொண்ட மூன்று OWS மோட்டார்களும் பொருத்தப்படுகின்றன.
இப்பணிகளை நேரில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவருமாறு துறைச்சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்
அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் பொள்ளாச்சி வனச்சரகத்திற்குட்பட்ட சேத்துமடை மேற்கு பிரிவு ஆயிரங்கால் சுற்றுப்பகுதியில் வளர்ந்துள்ள அன்னிய களைச்செடிகளான லண்டானா கேமரா அகற்றும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பழங்குடியினர் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களை கொண்டு உண்ணி குச்சிகள் அகற்றப்பட்டு தூணக்கடவு மலைவாழ் மக்கள் பெரும் பல நோக்கு கூட்டுறவு சங்கம் லிட் மூலம் அகற்றப்பட்ட உண்ணிகள் குச்சிகளை சேகரித்து அரவை இயந்திரங்கள் மூலம் தூளாக்கி விற்பனை செய்யுமாறு அறிவுறுத்தினார்.
பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆழியார் அணையினை நேரில் பார்வையிட்டு, அணையின் நீர்மட்டம், நீர் இருப்பு, குடிநீர் திட்டங்களின் செயல்பாடுகள் உள்ளிட்டவற்றை ஆய்வு மேற்கொண்டார்.





