கோவை : கோவை மாநகரின் முக்கிய சாலைகளில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மாநகரில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சிறிய அளவிலான விதிமீறல்கள் கூட சில நேரங்களில் பெரிய விபத்துகளுக்கு காரணமாகின்றன.
குறிப்பாக, அதிவேகம், சிக்னல் விதிமீறல், ஹெல்மெட் அணியாமல் செல்வது, செல்போன் பயன்படுத்தியபடி வாகனம் ஓட்டுவது போன்றவை விபத்துகளுக்கு முக்கிய காரணங்களாக உள்ளன. இதுபோன்ற விதிமீறல்களை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்துவதன் மூலம் விபத்துகளை குறைக்க முடியும் என்று போலீசார் தெரிவித்து வருகின்றனர்.
அதேபோல், ஏர்ஹார்ன் மற்றும் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களின் பயன்பாடு கோவை மாநகரில் பொதுமக்களுக்கு பெரும் இடையூறாக இருந்து வருகிறது. குறிப்பாக, பேருந்துகள் உள்ளிட்ட கனரக வாகனங்களில் அதிக சத்தம் எழுப்பும் ஹாரன்கள் பயன்படுத்தப்படுவதால், சாலையோரத்தில் நடந்து செல்லும் பொதுமக்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் முதியவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
திடீரென எழுப்பப்படும் அதிக சத்தத்தால் வாகன ஓட்டிகளின் கவனம் சிதறுவதுடன், பதற்றத்தில் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.
புதிய கருவி
இந்த சூழலில், கோவை மாநகர போக்குவரத்து போலீசாரிடம் பல்வேறு வசதிகளுடன் கூடிய வேகக் கண்காணிப்புக் கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கருவி மூலமாக நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை விட அதிக வேகத்தில் வாகனத்தை இயக்குவோருக்கும், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணிப்போருக்கும், அதிக ஒலி எழுப்பும் கனரக வாகனங்களுக்கும் தானியங்கி முறையில் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்தக் கருவியைப் பயன்படுத்தி அவினாசி சாலையில், போக்குவரத்து காவல் ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் விதிமீறிச் செல்வோருக்கு அபராதம் விதித்தனர்.

மாநகர போக்குவரத்து காவல்துறைக்கு இந்தப் புதிய நவீனக் கருவி, வழக்கமான வேகக் கண்காணிப்புக் கருவி போல் அல்லாமல், பல்வேறு வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறிய போக்குவரத்து கிழக்கு காவல் ஆய்வாளர் செந்தில்குமார், இதில் ஒலி அளவை கண்காணிக்கும் கருவியும் இணைக்கப்பட்டுள்ளதால் அதிக ஒலி எழுப்பும் கனரக வாகனங்களை கண்காணிப்பதோடு,
Also Read: கோவையில் வரி நிர்ணயம் செய்ய லஞ்சம் கேட்ட பெண் அலுவலர்- கையும் களவுமாக பிடித்த அதிகாரிகள்…
அவை எவ்வளவு ஒலி மாசு ஏற்படுத்துகின்றன என்பதையும் துல்லியமாகக் கணக்கிட்டு அபராதம் விதிக்க முடியும் என்றார். சாலை விதிகளை முறையாகக் கடைப்பிடித்து, விபத்துகளை குறைக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
கோவை மாநகரில் போக்குவரத்து விதிமீறல்களை கண்காணிக்க புதிய தொழில்நுட்பக் கருவிகள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், இது சாலையில் விதிகளை மீறி மக்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவோருக்கு கடிவாளம் போடும் வகையில் அமைந்துள்ளது.





