கோவை: உணவு மற்றும் குடிநீரால் பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் முறையிட்டதை தொடர்ந்தும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதை தொடர்ந்து கங்கா நர்சிங் கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலை வட்டமலைபாளையம் பகுதியில் கங்கா நர்சிங் கல்லூரி (தனியார்) இயங்கி வருகிறது.
நேற்று முன் தினம் இரவு கல்லூரி விடுதியில் உணவு அருந்திய பிறகு பல்வேறு மாணவிகளுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். உடனடியாக அந்நேரத்தில் உணவு அருந்திய 100க்கும் மேற்பட்ட மாணவிகள் உடனடியாக அதே கல்லூரி குழுமத்தின் சாய்பாபா காலனி பகுதியில் இயங்கி வரும் கங்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்குப் பிறகு நேற்று காலை அனைவரும் திரும்பினர்.
மூன்று மாணவிகளுக்கு மட்டும்தான் உடல் பாதைகள் ஏற்பட்டதாகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இதர மாணவிகளுக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக கல்லூரி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. உணவு மற்றும் குடிநீரில் பிரச்சனை இருப்பதாக தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து குடிநீர் தொட்டிகள் அனைத்தும் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று பல்வேறு மாணவிகளின் பெற்றோர் கல்லூரிக்கு சென்று இது குறித்த முறையிட்ட நிலையில் சுகாதாரத்துறையினரும் கல்லூரி வளாகத்திலும் விடுதியிலும் உணவகத்திலும் குடிநீர் தொட்டிகளில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் காவல்துறையினரும் கல்லூரிக்கு சென்றனர்.
இந்நிலையில் தற்போது கல்லூரி நிர்வாகம் 10 நாட்கள் Study Holidays என்ற முறையில் விடுப்பு அறிவித்து திறப்பு தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் சுற்றறிக்கை விடுத்துள்ளது.






Comments are closed.