கோவை: கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கவுண்டம்பாளையம் அன்னை இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த சுபாஷின் 7 வயது மகளுக்கு கடந்த ஜூன் 6-ஆம் தேதி முதல் கடுமையான காய்ச்சல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாலும், உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
இதையடுத்து குடும்பத்தினருடன் காரமடையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த சிறுமிக்கு அங்கு பாரம்பரிய நாட்டு மருந்து அளிக்கப்பட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில், நேற்று வீட்டில் இருந்தபோது சிறுமி திடீரென மயங்கி விழுந்தார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
ஆனால், அரசு மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வேதனையில் மூழ்கினர்.
சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுமியின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


