கோவை: கோவை தடாகம் அருகே பன்னிமடை பகுதியில் வாடகை வீட்டின் பின்புறத் தோட்டத்தில் காய்கறி செடிகளுக்கு நடுவே கஞ்சா செடிகளை வளர்த்து வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
ஒடிசா மாநிலம் பத்ராக் மாவட்டத்தைச் சேர்ந்த மாதபநந்தா ஜெனா (46), கடந்த 27 ஆண்டுகளாக கோவையில் தங்கி கட்டிடத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவர், தனது மனைவியுடன் பன்னிமடை கணேஷ் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டின் பின்புற காலி இடத்தில் காய்கறி செடிகளை நட்டு வளர்த்த அவர், அதே இடத்தில் தனது சொந்த பயன்பாட்டிற்காக இரண்டு கஞ்சா செடிகளையும் ரகசியமாக வளர்த்து வந்ததாக கூறப்படுகிறது.
காலப்போக்கில் அந்த கஞ்சா செடிகள் சுமார் 7 அடி உயரம் வரை வளர்ந்துள்ளன. குடியிருப்புப் பகுதியில் கஞ்சா செடிகள் வளர்க்கப்படுவதாக தடாகம் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து ஆய்வாளர் சுமதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தியபோது, வீட்டின் பின்புறத்தில் சுமார் 1 கிலோ 445 கிராம் எடை கொண்ட இரண்டு கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மாதபநந்தா ஜெனாவை போலீசார் கைது செய்து, கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர். மேலும் NDPS சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டுத் தோட்டத்திலேயே கஞ்சா செடி வளர்த்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


