கோவை: கோவை கணபதி பகுதியில் 30 மீட்டர் நீள பள்ளம் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.
கோவையில் நடுரோட்டில் 30 மீட்டர் பள்ளம்; வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்த பா.ஜ.க.வினர்
கோவை: கணபதி பகுதியில் பிரதான சாலையின் நடுவே சுமார் 30 மீட்டர் நீளத்தில் பள்ளம் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்த பா.ஜ.க.வினர், பொதுமக்களை எச்சரித்து பாதுகாப்பாக செல்ல அறிவுறுத்தினர்.
கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் குடிநீர், பாதாளச் சாக்கடை மற்றும் கழிவுநீர் குழாய் பதிக்கும் பணிகளுக்காக கடந்த காலங்களில் சாலைகள் தோண்டப்பட்டன. பணிகள் முடிந்த பின்னர் சில இடங்களில் முறையாக சீரமைக்கப்படாததால், மழைக்காலங்களில் மற்றும் கனரக வாகனங்கள் செல்லும் போது சாலைகள் சேதமடையும் நிலை இருந்து வருகிறது.
இந்த நிலையில், கணபதி 20-வது வார்டுக்கு உட்பட்ட 80 அடி சாலையில் திடீரென சுமார் ஒன்றரை அடி ஆழத்திலும், 30 மீட்டர் நீளத்திலும் பள்ளம் ஏற்பட்டது. இதனால் அந்த வழியாக சென்ற இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஏற்கனவே இதே பகுதியில் சாலை சேதம் காரணமாக வாகனங்கள் சிக்கிய சம்பவங்கள் நடந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மேலும், இந்த பள்ளம் காரணமாக விபத்து ஏற்படும் அபாயம் நிலவியதால் போக்குவரத்தில் சிரமம் ஏற்பட்டது.
தகவலறிந்த பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சம்பவ இடத்திற்கு சென்று, பள்ளம் உள்ள பகுதியை பொதுமக்களுக்கு சுட்டிக்காட்டி எச்சரித்ததுடன், வாகனங்களை மாற்றுப்பாதையில் செல்ல வழிகாட்டினர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து காவல்துறையினர், பாதுகாப்பு பேரிகார்டுகள் அமைத்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். மேலும், பள்ளத்தை சரிசெய்யும் நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


