கோவை: கோவை விமான நிலைய விரிவாக்கம் பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தி பொதுமக்கள் எம்.எல்.ஏவை சூழ்ந்து கோரிக்கை விடுத்தனர்.
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த சின்னியம்பாளையம் பகுதியில், சர்வதேச விமான நிலைய விரிவாக்கப் பணிகள் தீவிரமடைந்து வருகின்றன. இதற்காக நிலம் கையகப்படுத்தப்பட உள்ள பகுதிகளில், விமான நிலைய உயர் அதிகாரிகள் மற்றும் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் சுகுமார் ஆகியோர் இன்று நேரில் சென்று விரிவான ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின் போது உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
இந்த ஆய்வின் போது அப்பகுதி பொதுமக்கள், விமான நிலைய விரிவாக்கத் திட்டத்திற்கு நிலம் எடுக்கும் போது தங்களின் வாழ்வாதாரமும் குடியிருப்புகளும் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் நிலவுவதாக அதிகாரிகளிடமும் எம்.எல்.ஏ.விடமும் தெரிவித்தனர்.
மேலும், விமான நிலைய விரிவாக்கப் பணிகள் தங்களின் பகுதிக்குத் தேவையானவை என்றாலும், பொதுமக்களுக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாத வண்ணம், உரிய மாற்று ஏற்பாடுகளுடன் நிலத்தைக் கையகப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த 16 வருடங்களாக இந்த ஏர்போர்ட் விரிவாக்கப் பிரச்சனையால் தாங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக வேதனை தெரிவித்தனர். ஒரு ஏக்கருக்கு அரசு தற்போது நிர்ணயம் செய்துள்ள தொகை மிகவும் குறைவாக உள்ளதால், தற்போதைய சந்தை விலைக்கு ஏற்ப இடத்திற்கு உரிய விலை நிர்ணயம் செய்து அதனை கையகப்படுத்த வேண்டும் எனவும், இதற்காக உயர் அதிகாரிகளை அழைத்து முறைப்படி ஆவணம் செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அதிகாரிகளிடம் ஆக்ரோஷமாக வலியுறுத்தினர்.
பொதுமக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்த சூலூர் எம்.எல்.ஏ. சுகுமார் மற்றும் அதிகாரிகள், நில நிர்வாகப் பாதிப்புகள் மற்றும் விலை நிர்ணயம் குறித்து உடனடியாக அரசின் கவனத்திற்குத் கொண்டு சென்று, பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.


