கோவை: சூலூரில் சிறுமி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், தனது கணவர் மீது புகார் அளிக்க உள்ளதாக சிறுமியின் தாய் தெரிவித்துள்ளார்.
கோவை சூலூரில் 10 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட நிலையில், சிறுமியின் தாய் போத்தனூர் பகுதியில் உள்ள அவரது உறவினர் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “எனது சம்மதம் இல்லாமலேயே குழந்தையின் உடலை கணவரும் அவரது உறவினர்களும் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸில் பின்புற வழியாக எடுத்துச் சென்று தகனம் செய்து விட்டனர்” என்று குற்றம்சாட்டினார்.
மேலும், “குழந்தையின் இறப்பில் சந்தேகம் இருந்தால் பின்னர் எப்படி உடலை மீண்டும் எடுத்து பரிசோதனை செய்வது? எனது சம்மதம் இல்லாமல் உடலை எரித்தது ஏன்?” என்று கேள்வி எழுப்பினார்.
மருத்துவமனையில் எந்த ஆவணத்திலும் கையெழுத்திட மாட்டேன் என்று உறுதியாக இருந்ததாகவும், தனது உறவினர்களும் எந்த ஆவணத்திலும் கையெழுத்திடவில்லை என்றும் அவர் தெரிவித்தார். ஆனால் தனது கணவர் மற்றும் அவரது உறவினர்கள், தன்னிடம் சம்மதம் கேட்காமல் கையெழுத்திட்டு உடலை பெற்று சொந்த ஊரான சேலத்துக்கு கொண்டு சென்று தகனம் செய்துவிட்டதாக கூறினார்.
சேலத்தில் அமைச்சர் சம்பத் வந்தபோதும் அவரிடம் புகார் தெரிவிக்க முயன்றதாகவும், ஆனால் தனது கணவரின் குடும்பத்தினர் அதற்கு இடையூறு செய்ததாகவும், தன்னை தாக்கியதாகவும் குற்றம்சாட்டினார்.
தனது கணவர் மது அருந்தும் பழக்கம் உடையவர் என்றும், குளிர்சாதன பெட்டியில் இருந்த குளிர்பானத்தை குடித்தபோது அதில் ஏதோ கலந்திருந்ததாக சந்தேகிப்பதாகவும் தெரிவித்தார். அதை குடித்த சில நேரங்களில் என்ன நடந்தது எனக்கே தெரியவில்லை என்றும் கூறினார்.
கைதான கார்த்தியின் வீட்டிற்கு தனது குழந்தை அடிக்கடி விளையாடச் செல்வார் என்றும், அந்த வீட்டிலும் இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும் தெரிவித்தார். சில நாட்களுக்கு முன்புதான் அந்த பகுதிக்கு குடிபெயர்ந்ததாகவும் கூறினார்.
“எங்களுக்குள் முன்பாக எந்த கருத்து வேறுபாடும் இல்லை. மருத்துவமனையில் கடைசி நேரத்தில் தான் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதை யாரும் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம்” என்றும் அவர் தெரிவித்தார். அப்போது அவரது உறவினர்கள் மற்றும் குடும்பத்தினருக்கும் செய்தியாளர்களுக்கும் இடையே சிறிய வாக்குவாதமும் ஏற்பட்டது.
மேலும், முதலமைச்சருடன் செல்போனில் பேசியதாகவும், “உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்; உங்களை நேரில் வந்து சந்திக்கிறேன்” என்று முதலமைச்சர் தெரிவித்ததாகவும் கூறினார்.
குழந்தையின் உடலை அவசர அவசரமாக தகனம் செய்தது குறித்து ஐஜியிடமும் புகார் அளித்துள்ளதாக தெரிவித்த அவர், “எந்த காரணத்திற்காக இவ்வளவு அவசரமாக உடலை தகனம் செய்தார்கள் என்பது தெரியவில்லை. அதற்கான விளக்கம் வேண்டும். நான் நிவாரணம் கேட்கவில்லை; நீதிதான் கேட்கிறேன்” என்றார்.
இந்த விவகாரத்தில் தனது கணவர் மீது புகார் அளிக்க உள்ளதாகவும், தாம் மது அருந்தவில்லை என்றும், கார்த்தியின் இரண்டாவது மனைவி மீது சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், மருத்துவமனையில் அரசு அதிகாரிகள் இந்த வழக்கை அவசரமாக முடிக்க முயன்றதாகவும், தாய் மற்றும் தந்தை இருவரிடமும் கருத்து கேட்காமல், தந்தையிடம் மட்டும் பேசி ஒருதலைப்பட்சமாக செயல்பட்டதாகவும் சிறுமியின் உறவினர் ஒருவர் குற்றம்சாட்டினார்.
இறுதியாக, “கைதானவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். அவர்கள் அணு அணுவாக தண்டனை அனுபவிக்க வேண்டும். இனி வேறு எந்த குழந்தைக்கும் இதுபோன்ற சம்பவம் நடக்கக்கூடாது” என்று சிறுமியின் தாய் உருக்கமாக தெரிவித்தார்.
மேலும், தேவையில்லாமல் தன் மீது அவதூறு பரப்ப வேண்டாம் என்றும், “என்னிடம் தவறு இருந்தால் நான் சிறைக்கு செல்ல தயாராக இருக்கிறேன். இல்லையெனில் அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன்” என்றும் எச்சரித்தார்.


