கோவை: மாடலிங் துறையில் இருந்து திரைத்துறைக்குச் செல்லும் போது அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைகள் உள்ளன. இதனைத் தடுக்க விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவையில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் மாடலிங் துறை வல்லுநர் ஷில்பா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் வோக் மாடலிங் கம்பெனி சார்பில் ஆணழகன் போட்டி நடைபெற்றது. இதில் கோவை, திருப்பூர், ஈரோடு, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
கேஷுவல் ரவுண்ட், ஸ்விம் வேர் ரவுண்ட், டிரடிஷனல் ரவுண்ட், பிஸினஸ் ரவுண்ட், கேள்வி – பதில் சுற்று உள்ளிட்ட பல்வேறு கட்டங்களாக போட்டிகள் நடைபெற்றன. போட்டியாளர்கள் தங்களது உடை அலங்காரம், உடற்தகுதி, மேடை பேச்சுத்திறன் மற்றும் தன்னம்பிக்கையை வெளிப்படுத்தி பார்வையாளர்களை கவர்ந்தனர்.
இந்த போட்டியில் வெற்றி பெறும் போட்டியாளர்கள் அடுத்த கட்டமாக மாநில மற்றும் தேசிய அளவிலான அழகுப்போட்டிகளில் பங்கேற்பதற்கும், திரைத்துறையில் வாய்ப்புகள் பெறுவதற்கும் வாய்ப்புகள் கிடைக்கும் என்று ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். மேலும், வெற்றி பெற்றவர்களுக்கு ஆணழகன் பட்டம் வழங்கப்பட்டது.
இதுகுறித்து வோக் மாடலிங் நிறுவனத்தின் இயக்குநர் ஷில்பா சீதாராமன் கூறுகையில், “ஆண்கள் மற்றும் பெண்களுக்கான அழகுப்போட்டிகளை தொடர்ந்து நடத்தி வருகிறோம். கோவையில் இருந்து மாடலிங் துறைக்கு வருபவர்கள் குறைவாக இல்லை. ஆனால் சென்னை போன்ற சந்தை இல்லை.

இதுபோன்ற நிகழ்ச்சிகள் அவர்களுக்கு ஒரு பாலமாக இருக்கும். மாடலிங் துறையில் இருந்து திரைத்துறைக்குச் செல்லும் போது அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைகள் உள்ளன. இதனைத் தடுக்கவும், திரைத்துறையில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யவும் முதல்வர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.



