கோவை: இந்தியாவில் இதுவரை யாரும் நடத்தாத வகையில், போதைப்பொருள் விழிப்புணர்வை வலியுறுத்தும் பரதநாட்டிய மாரத்தான் நிகழ்ச்சி கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் நடைபெற்றது.
கருமத்தம்பட்டியைச் சேர்ந்த ரங்காஸ் அகாடமி பரதநாட்டியப் பள்ளியின் சார்பில், நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் “டான்ஸத்தான்” என்ற பெயரில், பரதநாட்டியம் ஆடியபடியே மாரத்தானில் பங்கேற்று போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
Also Read: கோவை கட்டாஞ்சி மலையடிவாரத்தில் யானைக் கூட்டம்- வனத்துறையின் எச்சரிக்கை- வீடியோ காட்சிகள்…
இதுகுறித்து ரங்காஸ் அகாடமி நிறுவனரும், நடன ஆசிரியருமான சுபா வசந்த் செய்தியாளர்களிடம் கூறுகையில், தற்போது போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிராக பல்வேறு தரப்பினரும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில், பரதநாட்டியத்தின் மூலமும் சமூகத்திற்கு ஒரு வலுவான செய்தியை கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.

கடந்த மூன்று வாரங்களாக தீவிர பயிற்சி மேற்கொண்ட மாணவர்கள், சுமார் 2 கிலோமீட்டர் தூரம் பரதநாட்டியம் ஆடியபடியே மாரத்தானில் பங்கேற்றது மிகவும் சவாலான முயற்சி என்றும், அதை முழு அர்ப்பணிப்புடன் வெற்றிகரமாக நிறைவேற்றியதாகவும் கூறினார்.
Also Read: கோவை போலீசார் பயன்படுத்திய வாகனங்கள் ஏலம்; எப்போது?
இந்த நிகழ்ச்சியில் 3 வயது முதல் 15 வயது வரை உள்ள மாணவர்கள் பங்கேற்றனர். இந்தியாவில் போதைப்பொருளுக்கு எதிராக இதுபோன்ற பரதநாட்டிய மாரத்தான் இதுவரை நடைபெற்றதில்லை என்றும், இது முதல்முறையாக தங்களது நடனப் பள்ளியின் மூலம் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், தமிழக அரசும் கோவை மாவட்ட நிர்வாகமும் அனுமதி வழங்கினால், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களை ஒருங்கிணைத்து, போதைப்பொருளுக்கு எதிரான மிகப்பெரிய விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தி கின்னஸ் சாதனை படைக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என்றார்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். கண்காணிப்பில் ஏற்படும் அலட்சியமே பல நேரங்களில் போதைப் பழக்கத்திற்கு வழிவகுக்கிறது என்றும் அவர் வலியுறுத்தினார்.
Also Read: கோவையில் காரை தாக்க முயன்ற காட்டு யானை- அதிர்ச்சி தரும் வீடியோ காட்சி…
இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற ஒத்துழைப்பு வழங்கிய கருமத்தம்பட்டி காவல்துறை, கிங் உடற்பயிற்சி கூடம், ஸ்ரீ கவி பியூட்டி பார்லர் மற்றும் மாணவர்களின் பெற்றோருக்கு சுபா வசந்த் நன்றி தெரிவித்தார்.





