கோவை: இஸ்ரேலில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்த நிறுவனம் மீது பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர்.
இஸ்ரேல் நாட்டில் அதிக சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, தமிழகம் முழுவதும் நூற்றுக்கணக்கான இளைஞர்களிடம் கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் சாலையில் ஓடித்திரியும் குட்டி யானையை தாயுடன் சேர்க்க போராட்டம்! வீடியோ காட்சிகள்
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்த பெஞ்சமின் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோவையில் உள்ள ‘ராயல் டெஸ்டிங் சென்டர்’ (Royal Testing Centre) என்ற நிறுவனத்தின் மூலம் இஸ்ரேல் வேலைக்கான விளம்பரத்தைப் பார்த்து அணுகியுள்ளார். அந்நிறுவனத்தின் உரிமையாளர் தேவா ஆசீர்வாதம் என்பவர், நேர்காணல் மற்றும் மருத்துவப் பரிசோதனைகள் முடிந்த பிறகு முதற்கட்டமாக ரூ.1 லட்சம் செலுத்தக் கூறியுள்ளார்.
பெஞ்சமின் வங்கிக் கணக்கு மூலம் ரூ.1 லட்சம் செலுத்திய பிறகு, அவருக்கு போலியான ஆஃபர் லெட்டர் மற்றும் விசா நகல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்பின், வருமான வரி பிரச்சனைகளை காரணம் காட்டி மீதமுள்ள ரூ.2 லட்சத்தை ரொக்கமாக பெற்றுள்ளனர். இஸ்ரேல் போர் காரணமாக விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, கடந்த இரண்டரை ஆண்டுகளாக காலதாமதம் செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில், பெஞ்சமின் உள்ளிட்ட பாதிக்கப்பட்டவர்கள் கோவை வந்து பார்த்தபோது, அந்நிறுவனம் மூடப்பட்டு, உரிமையாளர் தலைமறைவாகி இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர்.
இஸ்ரேலில் வேலை- கோடிக்கணக்கில் மோசடி என கோவையை சேர்ந்த நிறுவனம் மீது புகார்…
தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இதேபோல் ஏமாற்றப்பட்டிருக்கலாம் என்றும், ஒருவரிடம் ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை வசூலித்து கோடிக்கணக்கில் மோசடி நடைபெற்றிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து கோவை சி-2 ரேஸ் கோர்ஸ் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


